குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த அரசாங்கங்களின் கீழ், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு,
விடுதலைக்கு அனுமதிக்கப்படாத கைதிகள் குழுவொன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த அரசாங்கங்களின் போது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலை பெற்று விசேட பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக விடுவிக்கப்பட்ட 388 கைதிகளில், அங்கீகரிக்கப்படாத கைதிகள் குழுவின் பெயர்கள் இரகசியமாக சேர்க்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், வெசாக் பண்டிகை மற்றும் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஜனாதிபதியும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுவிக்கின்றனர்.
அபராதம் செலுத்துவதில் சிரமங்கள் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், தண்டனைக் காலம் முடியும் தருவாயில் உள்ள கைதிகளே, இவ்வாறு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் கடுமையான குற்றவாளிகளின் பெயர்கள் திட்டமிட்டு உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சில காலமாக இரகசியமாக விடுவிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்றும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை அதிகாரிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் செயல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான அநுராதபுரத்தைச் சேர்ந்த திலகரத்னவை கைது செய்ய பல புலனாய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.