கொத்மலை, இறம்பொடை - கெரண்டிஎல்ல பிரதேசத்தில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தமைக்கு, அந்த பஸ்ஸை செலுத்திய சாரதியின் அதீத சோர்வு மற்றும் தூக்கமின்மையே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
கெரண்டிஎல்ல பஸ் விபத்து தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (11) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
அக்குழுவின் தலைவரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவினால் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான (NC-1144) பஸ், கடந்த 11ஆம் திகதி அதிகாலை 4.45 மணியளவில் நுவரெலியா-கண்டி வீதியில் உள்ள கெரண்டிஎல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 23 பேர் உயிரிழந்ததோடு, 60 பேர் காயமடைந்தனர்.