அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு
முரணானவை என்றும், அவை நிறைவேற்றப்பட்டால், அவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளாலும், வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கக் கோரி மின்சார பொறியாளர்கள் சங்கம் உட்பட 7 தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (11) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுவை தாக்கல் செய்த மின்சார சபை பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித இஹலஹேவா, முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் மின்சார சபை ஒரு நிறுவனமாக மாறும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன் பங்குகள் திறைசேரி செயலாளரின் கீழ் கட்டுப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, நீர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கட்டுப்படுத்தப்படும் விதம் தொடர்பில் குறித்த சட்டமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் நீர் மின் உற்பத்தியை கட்டுப்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரம் மாற்றப்படும் நிலை ஏற்படலாம் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எச்சரித்தார். மின்சார சபை ஊழியர்களுக்கான இழப்பீடு தொடர்பான பிரச்சினைகள் உத்தேச சட்டமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
மின்சார சபையிலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இழப்பீட்டு முறை செயல்படுத்தப்படும் என்று முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் கூறப்பட்டாலும், அது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை தெளிவாகக் குறிப்பிடவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டத்தின் கீழ் நிறுவுவதற்கு முன்மொழியப்பட்ட நிறுவனத்தை நிர்வகிக்கும் பணிப்பாளரிகளின் தகுதிகள் இந்த சட்டமூலத்தில் விபரிக்கப்படவில்லை என்றும், தலைமை நிர்வாக அதிகாரி வணிகச் சட்டத்தில் நிபுணராக இருக்க வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் உள்ள சில விதிகள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், குறித்த விதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரினர்.