முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு கிழக்கில் ஹர்த்தால்!

திட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு முடங்கிப்போயுள்ளது.
சுயாதீனமான பல்கலைக்கழக கட்டமைப்புகளுக்குள் தலையீடுகளை செய்து மாணவர்களதும் மக்களதும் உணர்வுகளுடன் சீண்டும் அரசின் இனவாத நடவடிக்கைகளை எதிர்தது திட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதனிடையே யாழ் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக அனைத்து மாவட்டங்களும் முடங்கியுள்ளது.
வடக்கு கிழக்கு நகரங்களில் பொதுச் சந்தைகள், மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன, அரச போக்குவரத்து சபைக்குசொந்தமான பேரூந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன.
வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன.
அத்தோடு பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாணவர்களின் வரவு மிக மிக குறைவாக இருந்தமையால் பாடசாலைகளின் செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.