ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ளது.
குறித்த தாக்குதலை இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள, ஈரானின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இலக்குகளை உள்ளடக்கிய முன்கூட்டியே தாக்கும் துல்லியமான ஒருங்கிணைந்த தாக்குதல்களாகக் காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரநிலை பிரகடனம்
அத்துடன், ஈரானுக்கு எதிராக பல சுற்றுத் தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலையடுத்து, அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாடசாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட வேண்டும் என்றும் கூட்டங்கள் நடத்தப்படக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரானிய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலுக்கு செல்லத் திட்டமிடுபவர்கள் தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துவது நல்லது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் ஈரான் உட்பட பிராந்தியம் முழுவதும் விமான பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அருகில் வைத்திருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரான் முப்படைத் தளபதி பலி
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், இராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவை குறித்து ஒபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது.
இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஈரான் முப்படை தலைமைத் தளபதி, ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர், ஈரானின் அவசரகால கட்டளை மையத் தலைவர் உள்ளிட்ட மூவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இவர்களை கொல்ல 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் இராணுவத் தலைவர் பலி
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் புரட்சிகர இராணுவத் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை மேலும் பல இராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகம் கூறி இருக்கிறது.
இந்தச் சூழலில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈரான் பதிலடித்தாக்குதல்
ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரேலை நோக்கி 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜோர்தான் வான்வெளி மூடல்
இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக ஜோர்தான் தனது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது மற்றும் அனைத்து விமானங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம், அனைத்து ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
16 எயார் இந்திய விமானங்கள் திருப்பியனுப்பல்
ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களினால் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் – இஸ்ரேல் வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து 16 எயார் இந்திய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக எயார் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் , “இந்த எதிர்பாராத இடையூறு காரணமாக எங்கள் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், மேலும் பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவது உட்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.