அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏயார் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்திற்கு அருகே நடந்த எயார் இந்தியா விமான விபத்தில், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி விமானத்தில் பயணித்ததாக டிவி9 குஜராத்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், விபத்துக்குள்ளான விமானம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்டு, பிற்பகல் 1:10 மணிக்கு திட்டமிடப்பட்டு, 1:38 மணிக்கு புறப்பட்டு, இரண்டு நிமிடங்களில், அதாவது 1:40 மணிக்கு மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான இந்த விமானம் ஒரு போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும், இதில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்ததாக உறுதிப்படுத்தியுள்ளது.
8,200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் பெற்ற விமானிகள்
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் விமான ஓட்டிகளாக இருந்தவர்கள் 8,200 மணி நேரம் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து, லண்டனுக்கு AI171 விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 242 பயணிகள் பயணித்துள்ளனர். இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மதியம் 1.38 மணிக்கு பறக்கத் தொடங்கியது. ஆனால், சிறிது தொலைவில் சென்ற நிலையில், 1.42 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்த விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்தது.
இதில், விமானம் வெடித்து சிதறியது. மேலும், விமானம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டதால் அதில் எரிபொருள் அதிகளவில் நிரப்பப்பட்டிருந்தது. இதனால், அந்த இடமே பெரிய அளவிலான வெடிகுண்டு வெடித்தது போல இருந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
ஒரு விமானம் புறப்படுவதற்கு முன்பு அந்த விமானத்தின் என்ஜின் முறையாக இயங்குகிறதா, எரிபொருள் கசிவு இருக்கிறதா, வேறு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு இருக்கிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் பின்னரே, அந்த விமானம் புறப்பட்டு செல்லும். மேலும், இந்த விமானத்தில் இருந்த விமானி சுமித் சபர்வால் 8,200 மணி நேரமும், துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரமும் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றிருந்தவர்கள் என கூறப்படுகிறது.
மேலும், விமானம் புறப்பட்டு 5 நிமிடத்தில் எப்படி விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டிருக்க முடியும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இந்த விமான விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா சார்பில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் விமான விபத்து என்பதற்கு பதிலாக சம்பவம் என்று பதிவிட்டுள்ளது. இந்த பதிவு சந்தேகத்தை எழுப்பி இருந்தது.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதுக்கு காரணம் விபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், எந்த சதியும் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது.
விமானி கொடுத்த கடைசி தகவல்: “மே டே” என்றால் என்ன?
அகமதாபாத்தில் விமானம் குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்தபோதும் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தொடர்பு கொண்டு விமானம் ஆபத்தில் இருப்பதை குறிக்கும் வகையில் “மே டே” என அவசர தகவல் அனுப்பினார். பிறகுதான் விமானம் தொடர்பை இழந்தது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானியை தொடர்பு கொள்வதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த வார்த்தை ஏன் பயன்படுத்தப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன? என்பதை பார்க்கலாம்.
“மே டே” என்பது உலகளவில் விமானிகள் மற்றும் கடற்படைகள் அவசர அழைப்பு குறியீடாக பயன்படுத்தும் சொல். இது “Help me” அல்லது “Emergency” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை பிரெஞ்சு மொழியில் “m’aidez” உதவி செய்யுங்கள் என்பதிலிருந்து வந்ததாகும்.
விமானத்தில் தீவிரமான தொழில்நுட்ப கோளாறு, தீ, எரிபொருள் குறைவு, பயணிகள் உயிருக்கு அபாயம் போன்ற சூழ்நிலைகளில் விமானி தன்னுடைய நிலையை உடனடியாக கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க “மே டே” என மூன்று முறை கூறுகிறார். இது மிகுந்த அவசர நிலையை குறிக்கிறது.
“மே டே”க்கு அடுத்த முக்கிய குறியீடு “Pan-Pan”. இது அவசர நிலை என்றாலும், உடனடி உயிருக்கு அபாயம் இல்லாத சூழ்நிலையை குறிக்கிறது. “மே டே” என்று கூறும் போது, விமான கட்டுப்பாட்டு அறை உடனடியாக அந்த விமானத்திற்கு முன்னுரிமை அளித்து, தேவையான உதவிகளை ஏற்பாடு செய்யும்.
இது விமானிகள் மற்றும் பயணிகள் பாதுகாப்புக்காக மிக அவசியமான நடைமுறையாகும். விமானிகள் “மே டே” என்று கூறுவது, விமானத்தில் மிகுந்த அவசர நிலை ஏற்பட்டதை உலகளவில் புரிந்துகொள்ளும் வகையில் பயன்படுத்தப்படும் அவசர குறியீட்டு சொல் என்பதே இதன் முக்கிய நோக்கம்.