"வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டும், அது தமிழர் தாயகம் என்பதை மறைமுகமாக எடுத்தியம்பும்

வகையிலேயே தமிழக பாரதிய ஜனதாத் கட்சித் தலைவர் கே.அண்ணாமலை கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு எதிராக இலங்கை அரசு போர்க்கொடி தூக்கக்கூடாது என்பதற்காகவே வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளிலேயே உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த விசமத்தனமான கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மோடியில் கைகளில்தான் உள்ளன என்று இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் சென்னையில் வைத்து பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே சரத் வீரசேகர மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"அண்ணாமலை கூறுவது போல் 13ஆவது திருத்தச் சட்டம் தீர்வாக அமையாது. ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் உளறுவதை இந்தியத் தரப்பினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் அல்ல. 13ஆவது திருத்தத்தை நாடாளுமன்றம் ஊடாக முழுமையாக இல்லாதொழிப்பதற்கான நேரமே கனிந்துள்ளது. இலங்கையில் 13 க்கு எதிராக பிக்குகள் கூட வீதியில் இறங்கியுள்ளமை அண்ணாமலைக்குத் தெரியவில்லையா? இது பௌத்த நாடு என்பதை அவர் மறந்துவிட்டாரா?" என்றார்.

இதேவேளை, "வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களின் போது மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிட்டாலும் நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்ற நிலையையே தற்போது காணப்படுகின்றது." - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"வடக்கையும் கிழக்கையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளிலே இலங்கை அரசு எப்போது தாரைவார்த்தது? வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தலைவராக மோடி எப்போது பிரகடனப்படுத்தப்பட்டார்? அண்ணாமலையின் கருத்துக்கள் ஊடாக எம்மிடம் எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்.

அண்ணாமலை அண்மையில் இலங்கை வந்து தமிழகம் திரும்பிய பின்னர் சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதன் பின்புலம் தொடர்பில் நாம் தீவிரமாக ஆராய வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஒரு தரப்பினர் பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் நடத்த, அண்ணாமலை மோடியையும் வடக்கு - கிழக்கையும் இணைத்துப் பேசி அரசியல் நடத்துகின்றார். இலங்கை அரசு இவற்றையெல்லாம் கைகட்டி ஏன் வேடிக்கை பார்க்கின்றது? எல்லாம் மர்மமாகவே உள்ளது" என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி