இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் Cyber Security தொடரின் முதல் பகுதி இது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவர் புகைப்படங்கள் எடுப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பதால் கேமரா வாங்குவதற்காக இணையதளத்தில் கேமரா மாடல்கள் மற்றும் விலை பட்டியல் உள்ளிட்டவைகளை தொடர்ந்து தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி, அவரது பேஸ்புக் பக்கத்தில் சலுகை விலையில் கேமரா விற்பனைக்கு உள்ளதாக ஒரு ஆன்லைன் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்துள்ளார்.

அதில் குறிப்பிட்ட அந்த கேமராவின் விலை 30 ஆயிரத்து 500 ரூபாய். ஆனால் சலுகை விலையில் கேமராவிற்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கேமரா வாங்கும் ஆர்வத்தில் இருந்த அந்த இளைஞர் பேஸ்புக்கில் இருந்த லிங்கை க்ளிக் செய்து கேமராவை ஆர்டர் செய்துள்ளார்.

வெளிநாட்டு எண்ணிலிருந்து வந்த அழைப்பு

சற்று நேரத்தில் அந்த இளைஞரின் செல்போனிற்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் கேமரா வாங்கியதற்கு நன்றி எனவும், நீங்கள் மேலும் 60 ஆயிரம் செலுத்தினால் உங்கள் கேமராவுடன், ஆப்பிள் ஐ போன், ஆன்ட்ராய்டு போன் மேலும் சில எலட்ரானிக் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் இலவசமாக கிடைக்கும் என்றதுடன், அனைத்து பொருட்களின் புகைப்படங்களையும் அந்த இளைஞரின் வாட்சப் எண்ணிற்கு அனுப்பியுள்ளனர்.

கணினி

கணினி

இதனை நம்பிய அந்த இளைஞர் தனது வங்கி கணக்கில் இருந்து அவர்கள் கேட்ட தொகையை இணைய வழி பண பரிவர்த்தனை செய்துள்ளார். இரண்டு நாட்களாகியும் பொருள் வீடு வந்து சேரவில்லை. எனவே அந்த இளைஞர் தனக்கு வந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொருட்கள் குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் உங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள அனைத்து பொருட்களும் விலை உயர்ந்த பொருட்கள் என்பதால் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் கொண்டு வர வரி செலுத்த வேண்டும். எனவே மேலும் 90 ஆயிரம் ரூபாயை அனுப்ப வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கு மற்றொரு வங்கி கணக்கு எண் விபரங்களை கொடுத்துள்ளனர். இதனை நம்பிய அந்த இளைஞர் `கூகுள் பே` மூலமாக பணம் செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து அந்த ஆன்லைன் நிறுவனம் செல்போனில் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு வெவ்வேறு தேதிகளில் அந்த இளைஞரின் அப்பா வெளிநாட்டில் சம்பாதித்து சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக இளைஞரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்த 21.83 லட்சம் ரூபாய் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், கேமரா உள்பட எந்த பொருளும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த இளைஞர் ஒரு வாரமாக வீட்டின் அறையை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளைஞரின் பெரியப்பா நடந்ததை விசாரித்துள்ளார். அதில் மோசடி கும்பல் ஒன்று அந்த இளைஞரை ஏமாற்றியது தெரியவந்ததையடுத்து அந்த இளைஞரின் பெரியப்பா ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கை நேரில் சந்தித்து நடந்ததை கூறி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனையை தொடங்கினர்.

முதல் கட்ட விசாரனையில் மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்குகள் அனைத்தும் மேற்கு வங்கத்தை சேர்ந்தது என தெரியவந்தது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அந்த மோசடி கும்பல் குறித்த முழு விபரங்களும் கிடைத்தன.

இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட தனிப்படை இன்னும் ஓரிரு நாட்களில் மேற்கு வங்கத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் வட்டாரத்தில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு சம்பவம்

கடந்த 3ஆம் தேதி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசாரிடம் இதே போல மற்றொருஆன்லைன் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பரிசு விழுந்ததாக கூறி ரூ.92 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் தான் எப்படி ஏமாற்றப்பட்டேன் என பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார் அந்த இளைஞர், "எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி. நான் சமீபத்தில் கல்லுரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருக்கிறேன்.

நான் கடந்த மாதம் 27ஆம் தேதி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றின் மூலம் நாடித்துடிப்பு கண்டறியும் உபகரணம் (pulse meter)ஒன்று வாங்கினேன். அதன் பிறகு என்னுடைய வாட்சப் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

அதில் "நீங்கள் ஆன்லைன் மூலமாக வாங்கிய நாடித்துடிப்பு கண்டறியும் உபகரணத்திற்கு ரூ.9.30 லட்சம் பரிசு விழுந்துள்ளது. இந்த தொகையை பெற கமிஷன் தொகையாக ரூ.9 ஆயிரத்தி 300 செலுத்த வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது.

அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது ஒரு பெண் சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். வங்கி அல்லது செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதை போல் அந்த பெண் நான் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் மிகவும் துல்லியமாக பதில் அளித்தார். இதனால் வாடிக்கையாளர் மையத்தில் இருந்து தான் அழைத்து நமக்கு பரிசு விழுந்தது குறித்து சொல்கிறார்கள் என நம்பினேன்."

சைபர்

சைபர்

அடுத்தடுத்து பணம் அனுப்பினேன்

"வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பிய வங்கி கணக்கிற்கு 9,300 ரூபாய் செலுத்தினேன். ஆனால் அந்த நிறுவனம் அறிவித்த பரிசு தொகை எனக்கு கிடைக்கவில்லை. பின்னர் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது, அந்த பெண் நீங்கள் உரிய நேரத்தில் வங்கி கணக்கில் அந்த பணத்தை செலுத்தாததால் நீங்கள் அனுப்பிய தொகை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத் தொகையை செயல்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வர மேலும் ரூ.27 ஆயிரத்து 900 அனுப்ப வேண்டும் அப்படி செலுத்தினால் நீங்கள் முன்னதாக செலுத்திய பணமும் மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து விடும் பயப்பட வேண்டாம் என அந்த பெண் கூறினார்.

நான் மீண்டும் அவர்கள் கேட்ட தொகையை செலுத்தினேன், அப்போது வங்கி பண பரிவர்த்தனையில் நிலுவை தொகை இருப்பதாக கூறி ரூ.49 ஆயிரத்து 800 அனுப்பும் படி மீண்டும் வாட்ஸ் ஆப் மூலம் செய்தி வந்தது.

நான் அவர்கள் கேட்ட தொகையை கொஞ்சமும் கூட யோசிக்காமல் செலுத்தினேன். கடைசியாக 5 ஆயிரத்து 550 ரூபாயை அனுப்பினால் உங்கள் பரிசுத்தொகை வீடு தேடி வந்துவிடும் என்ற செய்தி வந்தது. நான் அந்த தொகையையும் செலுத்தினேன் ஆனால் பரிசு தொகை கிடைக்கவில்லை.

இவ்வாறு பல தவணைகளில் மொத்தமாக ரூ.92 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டேன். ஒரு கட்டத்தில் எனக்கு சந்தேகம் எழுந்தது உடனடியாக அந்த வாட்சப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு அலுவலக முகவரி கேட்டேன் அதற்கு அந்த பெண் இந்த நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இயங்கி வருவதால் இந்தியாவில் அலுவலகம் இல்லை என தெரிவித்தார்.

அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டது எனக்கு தெரியவந்தது. மீண்டும் அந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு என்னை நீங்கள் ஏமற்றியது எனக்கு தெரிந்து விட்டது விரைவில் காவல்துறையிடம் புகார் அளித்து உங்களை பிடித்து விடுவேன். என்னிடம் இருந்து பெற்ற பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன் தொடர்பை துண்டித்த அந்த பெண் என்னுடைய எண்ணை ப்ளாக் செய்து விட்டார்.

சைபர் பாதுகாப்பு

தன்னை ஏமாற்றி பணம் பறித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இழந்த தொகை ரூ.92 ஆயிரத்து 220 ஐ பெற்றுத்தர கோரி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன்," என்றார்.

இது ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாள்களில் பதிவாகிய இரு வழக்குகள். ஆனால் அங்குமட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பெருந்தொற்று காலத்தில் இம்மாதிரியான ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைன் மோசடி: காரணங்களும், பாதுகாப்பு அறிவுரையும்

கடந்த ஓராண்டில் மக்களிடையே ஆன்லைன் பயன்பாடு அதிகரித்துள்ளது போலவே மோசடிகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறார் தமிழகத்தின் ஒங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் பிரிவு எஸ்.பி அர்ஜுன் சரவணன்.

"அறியாமை மற்றும் பேராசை இந்த இரண்டு காரணங்களால்தான் ஆன்லைன் மோசடிகள் அதிகம் நடைபெறுகின்றன," என்று கூறினார்.

"அதேபோன்று ஒரு குறிப்பிட்ட மோசடி குறித்து மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டால் மோசடி நபர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

"இப்போது பெரிதும் உங்கள் கார்டின் எண்களை யாரும் கேட்பதில்லை ஏனென்றால் அதுகுறித்த விழிப்புணர்வு வந்துவிட்டது.

எனவே புதுப்புது வழிகளில் ஏமாற்ற முயற்சிப்பார்கள். சில சமயங்களில் பாலியல் பலவீனங்களை கொண்டு மோசடியில் ஈடுபடுவர்." என்கிறார் அவர்.

அரசாங்கம் இதுகுறித்த விழிப்புணர்வை அனைத்து தளங்களிலும் ஏற்படுத்தி வருகிறது அதேபோன்று மக்களும் இதுகுறித்து வெளியில் பேச தயாராக இருக்க வேண்டும் என்கிறார் அர்ஜுன் சரவணன்.

அதுமட்டுமல்லாம் இம்மாதிரியான ஆன்லைன் பரிவர்த்தனைகளில் தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் அப்படியே அம்மாதிரியான சூழல் வந்தால் ஒரு சிறிய தொகையை அனுப்பி விட்டு அதற்கான உறுதி வந்த பிறகு மேற்கொண்ட பரிவர்த்தனையை செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோன்று ஆன்லைன் ஷாப்பிங்கில் பரிவர்த்தனை செய்யும் போது நாம் பணம் செலுத்த எத்தனிக்கும் வலைதளம் உண்மையானதா அல்லது பாதுகாப்பானதா என்பதை சோதித்த பிறகு பரிவர்த்தனை செய்யலாம் என்ற எச்சரிக்கையையும் காவல்துறையின் சைபர் பிரிவு கூறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் சைபர் கிரைம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் ராமநாதபுரம் சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் திபாகர் பிபிசி தமிழிடம் பேசுகையில்,

"நீங்கள் செலுத்திய பணம் ஒரு மோசடி கும்பலின் வங்கி கணக்கு என தெரிய வந்தால் உடனடியாக 155260 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு நீங்கள் பணம் செலுத்தி ஏமாந்த வங்கி எண்ணை தெரிவிக்கலாம். 24 மணி நேரத்திற்குள் நீங்கள் செலுத்திய பணத்தை அந்த வங்கி கணக்கில் இருந்து அந்த நபர் எடுக்கவில்லை என்றால் பணத்தை அந்த வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியாமல் நிறுத்தி வைக்க முடியும்." என்கிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி