கடந்த செப்டம்பர் 07ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி திருத்தச் சட்டமூலமானது கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் செயலாகுமென, நுகேகொட கட்சி அலுவலகத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறினார்.

சட்டமூலத்தின்படி, பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் அல்லது செலுத்தப்படாத வரிப்பணத்தை எங்காவது முதலீடு செய்வதாயிருந்தால் அதற்கு 1 சதவீத வரி செலுத்தப்பட வேண்டுமென இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் புபுது ஜயகொட கூறினால். அவர் மேலும் கூறுகையில்,

“இந்த ஒரு சதவீதம் என்பது லஞ்சம் கொடுப்பதைப் போன்றதாகும். ஏனைய வரிகளுக்கு பெயர் சூட்டுவதைப் போல இந்த வரிக்கும் பெயர் சூட்டுவதாயிருந்தால் லஞ்ச வரி என்றே பெயர் சூட்ட வேண்டும். இது லஞ்சம். இது சம்பந்தமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்திடம் முறைப்பாடு செய்ய வேண்டும். சட்டத்திற்கு முரணாக பதுக்கி வைத்துள்ள பணம் மற்றும் சொத்துக்களை சட்டபூர்வமாக்குவதற்காக அவற்றின் மதிப்பில் ஒரு சதவீத லஞ்சத்தை அரசாங்கம் அறவிடும்.

இப்படியான விடயங்கள் உலகின் ஏனைய நாடுகளிலும் நடப்பதால் இது ஒரு முதலீடாகுமென கடந்த 07ம் திகதி பாராளுமன்றத்தில் பெஸில் ராஜபக்ஷ கூறியிருந்தார். நிதி அமைச்சர் சொல்வதைப் போல இது ஒருபோதும் முதலீடாக இருக்க முடியாது. இந்த சட்டமூலத்தின் ஊடாக பெரு நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் வரிச் சலுகை வழங்கி சாமானிய மக்களை கஷ்டத்தில் தள்ளப் போகிறார்கள்.

ஏற்கனவே 2015லிருந்து 2019 வரை கடந்த 5 வருட காலத்தில் 41415 கோடி வரிப் பணம் அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லையென கணக்காய்வாளர்நாயகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 2020ல் 10500 கோடி வரி அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லையென கோப் கமிட்டி கூறுகிறது. கடந்த 6 வருடங்களில் மாத்திரம் 50000 கோடிக்கும் மேற்பட்ட வரிப்பணம் அரசாங்கத்திற்கு வஞ்சிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் இந்த மோசடியை செய்திருக்கின்றன. அவற்றின் சொத்துக்களை சரியாகக் காட்டமலேயே இந்த மோசடியை செய்துள்ளன.

மோசடி செய்யப்பட்ட பணத்தை அறவிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால், மோசடி செய்தவர்களின் பணத்தை சட்டபூர்வமாக்க, கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற புதிய சட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன” எனவும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி