கொரோனா தொற்றுநோயை குணப்படுத்தும்  எனக்கூறி, இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளை பயன்படுத்த வேண்டமென சுதேச வைத்திய அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனாவின் மூன்றாவது அலையின் பாதிப்பு அதிகரிப்பால், தொற்றுக்கான மருந்து என்ற அறிவித்தலுடன் சுதேச வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் மருந்துப்  பொருட்களுடன் கூடிய மருந்துச் சீட்டுகள் கடந்த காலத்தைவிட அதிகமாகவும், வேகமானவும் பரவி வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக  சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபோன்ற வெளிநாட்டு மருந்துகளை பரிசோதிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது கொரோனாவுக்கு சிகிச்சை என  விளம்பரம் செய்யப்பட்ட 'தம்மிக பாணி' என்ற பானத்தை உட்கொண்ட சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு தொற்று ஏற்பட்டதோடு, இப்போது மேற்கத்தேய வைத்தியத்தின் பின்னர் குணமடைந்துள்ளார்.

ஆயுர்வேதம் மற்றும் சுதேச வைத்தியத்தில் ஒரு நோய்க்கான மருந்தை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தொடர்பில் கருத்தில் கொள்வது அவசியமானது என  அவரது அனுசரணையில் இயங்கும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்த மருந்துகளுக்கு ஒரு மூலிகை மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டால், தாவரத்தின் எந்த பகுதியை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய தெளிவான அறிவு காணப்படுவது  மிகவும் முக்கியம் என அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"ஒரு மருந்து தயாரிப்பில் ஒரு தாவரத்தின் பட்டை பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பத்தில் அந்த தாவரத்தின் பழத்தைப் பயன்படுத்துவது மருந்தின் சரியான பயனப்பெற முடியாது என்பதோடு, அது  உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் சேர்வதற்கும் வழிவகுக்கும்."

ஆகவே பாரம்பரிய கை வைத்தியங்களைத் தவிர ஏனயை மருந்துகளை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு, சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு பொதுமக்களை மேலும் கேட்டுக்கொள்கிறது.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய மருந்து வகைகள் மற்றும் ஏனைய சிகிச்சை முறைகள் தொடர்பில் அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம், மாகாண ஆயுர்தேச திணைக்களம், மற்றும் சமுதாய சுகாதார வைத்தியர்கள் தெளிவுபடுத்துவார்கள் என இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டுமென இராஜாங்க அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி