இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதை நிறுத்த முடியாது. அவ்வாறு நிறுத்துவதாக இருந்தால், அதுதொடர்பான தீர்மானத்தை சுகாதாரப் பிரிவினரே மேற்கொள்ள வேண்டும். என்றாலும், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் குறைவடைந்துள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் வருவதை நிறுத்துவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில் அங்கிருந்து எயார் பபல்ஸ் திட்டம் முறையில் இலங்கைக்கு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு நாங்கள் தான் இந்தியாவிடம் கோரியிருந்தோம்.

என்றாலும் இந்தத் திட்டம் ஆரம்பித்து சில தினங்களில்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மோசமான நிலை ஏற்பட்டது. இதனால் தற்போது நாங்கள் நிலைமையை உணர்ந்து இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவதைக் குறைத்திருக்கின்றோம். அவர்கள் இலங்கைக்குள் வரமுடியாத வகையில் எமது கட்டுப்பாடுகளை அமைத்திருக்கின்றோம். அத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை திடீரென எந்த நாட்டுக்கும் நிறுத்த முடியாது.

அவ்வாறு செய்வதாக இருந்தால், சுகாதாரப் பிரிவினர் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு குழு இதுதொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும். என்றாலும் எயார் பபல்ஸ் முறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அத்துடன் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதாக இருந்தால் அவர்கள் எமது நாட்டில் தங்குவதற்கு ஹோட்டல் ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.

இலங்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஹோட்டல் வசதிகளை வழங்குவதற்கு அதிகமானவர்கள் மறுப்பு வெளியிட்டுள்ளனர். அதனால், அவர்களின் வருகை குறைவடைந்துள்ளது. அதேபோன்று இந்தியாவுக்கான படகு போக்குவரத்தும் குறைந்துள்ளது. அதேபோன்று இந்தியாவுக்கான ஏற்றுமதிகளும் குறைவடைந்துள்ளன எனத் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி