1200 x 80 DMirror

 
 

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சாய்ந்தமருது எம்.எம்.ஆதம்பாவா அவர்களின் ஜனாஸாவை எதிர்வரும் மார்ச்-18 ஆம் திகதி வரை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாய்ந்தமருது மார்க்கட் வீதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான எம்.எம்.ஆதம்பாவா சுகயீனம் காரணமாக கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணித்திருந்தார்.

இதையடுத்து, இவரது மரணித்த உடலில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவரது ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகத்தினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கவில்லை எனவும் இம்மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து, அவரது மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கோரி அவரது குடும்பம் சார்பில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (15) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அம்மனு விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து கல்முனை மேல் நீதிமன்ற்தில் மீளாய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று செவ்வாய்க்கிழமை (16) கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சிறினிதி நந்தசேகரம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களில் திருப்தியுற்ற நீதிபதி, இம்மனுவை விசாரணைக்காக ஏற்றுக்கொண்டதுடன் குறித்த நபரின் ஜனாஸாவை எதிர்வரும் மார்ச்-18 ஆம் திகதி வரை தகனம் செய்யாமல் அவ்வாறே வைத்திருக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் பிரதிவாதிகளை அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்குமாறும் நீதிபதி பணித்தார்.

மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.அப்பாஸ் மற்றும் சட்டத்தரணிகளான முகைமீன் காலித், சஞ்சித் காதர் இப்றாஹிம், றதீப் அஹமட் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி