உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரின் மனைவியின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மொஹமட் சஹ்ரானின் மனைவி பாத்திமா காதர் சாதியா, கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள வெலிக்கட சிறையில் இருந்து வெலிகந்தவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய மையம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் சாட்சியமளித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனியவுக்கு நவம்பர் 10ஆம் திகதி எழுதிய அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

"சாதியா கொரோனா  வைஸால் பாதிக்கப்பட்டுள்ள வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து வெலிகந்தவில் அமைக்கப்பட்டுள்ள  சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டமை தொடர்பிலான தகவல் வெளியான நிலையில், இது குறித்த கரிசனை அதிகரித்துள்ளது”

சஹ்ரான் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கு எவ்வாறு பணம் கிடைத்தது என்பது தொடர்பில் சாதியா பாத்திமா  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வெளிப்படுத்தியதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எங்கே இருக்கிறீர்கள்?

சஹ்ரானின் மனைவி இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படாமை குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

"அனைத்து விளக்கமறியல் கைதிகளினதும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான சட்டபூர்வமான பொறுப்பை நிறைவேற்ற உங்கள் அலுவலகம் செயற்படும் என நாங்கள் நம்புகிறோம். இந்த கடிதம் தொடர்பில் உடனடியான அவதானத்தை எதிர்ப்பார்க்கின்றோம். கைதியின் உயிரைப் பாதுகாக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், சாதியா இருக்கும் இடம் மற்றும்  மற்றும் அவரது தற்காலிக ஆரோக்கியத்திற்கு பொறுப்பான அதிகாரிகளின் விபரங்கள்  குறித்து தபால் மூலம் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவும்” 

கைதிகளின் உரிமைகள் குறித்து ஆராயவும், மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்யவும், கைதிகளின் நலன் தொடர்பில் ஆராயவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சட்ட ரீதியான அதிகாரம் காணப்படுவதாக செயலாளர் தமாரா விமலசூரியவின் கையெழுத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடிதத்தின் நகல்கள், கொரோனா தொற்றை  தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி