எக்காரணம் கொண்டும் ஸ்ரீ தலதா மாளிகையின் புனித தலதா வழிபாட்டுக்கு, புதிய பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று, பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீ தலதா வழிபாட்டுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நேற்று முதல் யாரும் வழிபாட்டில் பங்கேற்க முடியாது என்று தலதா மாளிகை வழிபாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும், தற்போது வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தங்கள் வழிபாடுகளைச் செய்ய ஒரு வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 400,000 பக்தர்கள் தற்போது வரிசையில் காத்திருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது வரிசையில் காத்திருக்கும் மக்கள் ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையை நிறைவு செய்யும் போது, 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலாகும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஸ்ரீ தலதா வழிபாட்டை நிறைவேற்ற பக்தர்கள் கண்டிக்கு வர வேண்டாம் என்றும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால், நாளை (26) பிற்பகல் அல்லது 27ஆம் திகதி காலை அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை இன்று (25) 8ஆவது நாளாக காலை 11 மணிக்கு தொடங்கியது.