கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார தரப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லடக்கம் செய்வது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது...

கொரோனா வைரஸின் மூலம்  முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரைக் குளிப்பாட்டுவது, கபன் செய்வது, தொழுகை நடாத்துவது மற்றும் அடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது பர்ளு கிபாயாவாகும். பர்ளு கிபாயா என்பது, இவற்றை முஸ்லிம்களில் சிலர் நிறைவேற்றி விட்டால் போதுமானது. அவ்வாறு யாரும், அக்கடமைகளை நிறைவேற்றாவிட்டால், முஸ்லிம்கள் அனைவரும் பாவிகளாக ஆகிவிடுவார்கள்.

இவ்வடிப்படையில், கொரோனா வைரஸ் தாக்கி மரணித்த ஒருவரது உடலிலிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதால், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல் முற்றுமுழுதாக பையினால் மூடப்படும். எனவே, அதைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கி மரணிக்கும் ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது போனாலும், அதற்காக ஜனாஸாத்  தொழுகையை நடாத்தி அடக்கம் செய்வது அவசியமாகும்.

கொரோனா மூலம் மரணிக்கும் ஒருவரின் இறுதிக் கிரியைகள் விடயத்தில் அரசாங்கம் சில நடைமுறைகளைப் பிரகடணப்படுத்தியுள்ளது.

அவற்றில், மரணித்தவரது ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது, ஜனாஸாவை எரித்தல் வேண்டும், அடக்குவதாக இருந்தால், ஆறு அடிகள் ஆழமாக கப்ரு (குழி) இருத்தல் வேண்டும், அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் அடக்கம் செய்யப்படல் வேண்டும், மிகவும் நெருங்கிய ஒரு சில உறவினர்களே அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு அனுமதிக்கப்படல் வேண்டும், பிரத்தியேக இடத்தில் அடக்கம் செய்தல் வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் உள்ளன.

மேற்குறிப்பிட்ட மார்க்க சட்டத்தின் அடிப்படையில், மரணித்தவரின் உடலைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாது என்பதால் தொழுகை மாத்திரம் நடாத்தி அரச அதிகாரிகளின் அறிவுரைகளுடன், அதிக நபர்கள் ஒன்று சேராமல், முக்கிய சிலர் மாத்திரம் ஒன்று சேர்ந்து ஜனாஸா தொழுகை மற்றும் அடக்கும் பணிகளில் ஈடுபடுதல் வேண்டும். மற்றவர்கள் இவ்வாறான நிர்ப்பந்த நிலையில் மறைமுக ஜனாஸாத் தொழுகையை தொழுது கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

இரண்டாம் இணைப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் முஸ்லீம்களின்  சடலங்களை அடக்கம் செய்ய அனுமதித்த தகவல் பொய்யானது

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான, சர்வதேச ரீதியான தரங்களை பொருட்படுத்தாமல், விதித்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற விடயம்  அம்பலமாகியுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததாக வெளியான தகவல்கள் பொய்யானவை என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

உயிரிழக்கும் முஸ்லீம்களின் இறுதி சடங்கை நடத்துவதற்கான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்காக,  நன்றி தெரிவிப்பதாக, நேற்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச சகோதரர்களுக்கு எழுதிய கடிதத்தில்,  சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர். அப்துர் ராசிக் தெரிவித்திருந்தார்.

தற்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உண்மைகளின் அடிப்படையில்  யாராவது இறந்தால் அந்த உடல் தகனம் செய்யப்படும் என நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜயருவன் பண்டார,  தௌஹீத் ஜமாத் அமைப்பின் அறிவித்தலையும் நிராகரித்தார்.  

விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், சுகாதார அமைச்சு இதுவரை அவ்வாறான ஒரு தீர்மான்ததை  எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

 "கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த உடல்கள் தகனம் செய்யப்படும். அது இந்த நாட்டின் பிரதேச பற்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உண்மைகள் இரண்டின் அடிப்படையில் நடை பெறும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  தெறிவித்தார். இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு விடயங்கள்  குறித்து சுகாதார அமைச்சு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ”

புதிய கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய தற்போதைய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக  சமூக ஊடகங்களில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்து முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு, முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம்” என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக  சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் விவாதம்

கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் இறுதி சடங்குகள் குறித்து இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு ஒரு பக்கச்சார்பற்ற நிபுணர் குழுவை நியமிக்குமாறு வைத்திய நிபுணர்கள் விடுத்த வேண்டுகோள் தொடர்பில் ஆறு மாதங்கள் கடந்தும் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தாமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அண்மையில் கவலை தெரிவித்தன.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றை புறந்தள்ளி கொரோனா தொற்றுநோயால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்கும் அரசாங்கத்தின் குறித்த தீர்மானத்தை ஆராய்வதற்காக குழுவை நியமிப்பது தொடர்பில் ஆறு மாதங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டது.  

நவம்பர் 4ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,  இலங்கையில் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான மனித உரிமையை விரைவில் அனுமதிக்குமாறு நீதி அமைச்சருக்கு அழைப்பு விடுத்ததோடு, இறந்த ஒன்பது முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ள விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.

“இன்று ஒன்பது பேர். காலம் செல்ல செல்ல இது அதிகரிக்கும். இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இது அரசியல் அல்ல. நீங்கள் இறந்தால், நீங்களும் எரிக்கப்படுவீர்கள். நான் இறந்தால், நான் எரிக்கப்படுவேன். அதைப் பற்றி சிந்தியுங்கள்.” என முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

ஒரு பிரிவினைவாத தீர்மானம்

கொரோனா மரணம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் விருப்பத்திற்கு அமைய புதைப்பது அல்லது தகனம் செய்வதன் மூலம் இறுதிச் சடங்குகளை நடத்தலாம் என உலக சுகாதார ஸ்தாபனம்  (WHO) தெரிவித்துள்ளபோதிலும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் ஒரு பிரிவினைவாத தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் மக்களுக்கு பிரச்சினை இருந்தாலும், அதை அரசியல் மயப்படுத்தக்கூடாது என வலியுறுத்தினார்.

 உலகின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்ட இலங்கை

கொரோனா தொற்றுநோய் பரவலுடன் இணைந்தாக மேற்கொள்ளப்படும் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு உலகின் சக்திவாய்ந்த இஸ்லாமிய அமைப்பு  இலங்கைக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டைக் கண்டித்திருந்த 57 நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), சமூகத்தின் உரிமைகள் மற்றும் கௌரவங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் மற்றும் இஸ்லாமிய சடங்குகளை மீறி கொரோனா தொற்றால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும், கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் பொறுப்பில் உள்ள அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகள், பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக கவலையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி