அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி முடிந்துள்ள நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

அந்த வகையில் இந்திய / இலங்கை நேரப்படி வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் ஜோ பைடனுக்கு 243, டிரம்புக்கு 214 என்றவாறு முன்னிலை நிலவரம் உள்ளது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் முழுமையான முடிவுகள் வெளியாக சில நாட்கள் கூட ஆகலாம்.

இப்போது முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில் மட்டுமே வெற்றியாளர் கணிக்கப்படுகிறார். மொத்தமுள்ள 538 தேர்தல் சபை உறுப்பினர்களில் குறைந்தது 270 பேரை பெறுபவர் அதிபர் பதவிக்கு வர முடியும்.

பல மாகாணங்களில் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பென்சில்வேனியா, அரிசோனா, நெவாடா , ஜோர்ஜா உள்ளிட்ட மாகாணங்களைக் கைப்பற்றும் வேட்பாளரே தேர்தலில் வெல்ல முடியும் எனும் சூழல் உண்டாகியுள்ளது. நாடு முழுவதும் இன்னும் பல லட்சம் வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளன.

ஒருவேளை டிரம்ப், 10 தேர்தலை சபை வாக்குகளைக் கொண்ட விஸ்கான்சினை இழந்தால், அவர் ஜோர்ஜாவில் வென்றாக வேண்டும். அந்த மாகாணத்துக்கு 16 வாக்குகள் உள்ளன. இது தவிர வடக்கு கரோலைனா (16), பென்சில்வேனியா (20), அரிசோனா (11) அல்லது நெவாடா (6) ஆகியவற்றில் அவர் வென்றாக வேண்டும்.

இரு தரப்பின் பிரசாரக் குழுவும் ஆங்காங்கே சட்ட நடவடிக்கை மேற்கொண்டு தேர்தல் வெற்றிக்கு உரிமை கொண்டாட முயன்று வருகின்றன.

இரு தரப்புக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவும் போர்க்கள மாகாணங்களான மிஷிகன், பென்சில்வேனியா, ஜோர்ஜா ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கையைத் தொடர்வதற்கு எதிராக ஏற்கெனவே டிரம்பின் பிரசார குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இன்னும் சுமார் 50,000 வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட வேண்டி இருப்பதாக ஜோர்ஜாவின் மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் - அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நெருங்கும் சமையத்தில், "வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு" அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் பேசிய அவர், "அமெரிக்க மக்கள் மீது நடத்தப்படும் மோசடி இது" என்று இந்த தேர்தலை குறிப்பிட்டார்.

அமைப்பு ரீதியிலான மோசடிக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் வாக்களிப்பதையும் நிறுத்துமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் தரப்பு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நெவாடாவில் வசிக்காதவர்களின் சுமார் 10,000 வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறி, குடியரசுக்கட்சியினர் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.

அதிகளவில் அஞ்சல் வாக்குகள் அனுப்பப்பட்ட மாகாணங்களில் நெவாடாவும் ஒன்று. இதில் மோசடி நடைபெற வாய்ப்பிருப்பதாக பிரசாரம் செய்யும்போதே அதிபர் டிரம்ப் பேசினார்.

மோசடி நடைபெற்றது என பல முறை டிரம்ப் கூறினாலும் , அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து குடியரசுக்கட்சியினர் வழக்கு தொடரும் நான்காவது மாகாணம் நெவாடா.

வெவ்வேறு செய்தி ஊடகங்கள் முன்னிலை நிலவரம் குறித்து வெவ்வேறு தகவல்களை அளிப்பது குறித்து குழப்பமாக உள்ளதா?

இதற்கு காரணம் 11 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்ட அரிசோனா மற்றும் 10 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்ட விஸ்கான்ஸின் ஆகிய மாகாணங்களை எதிர்க்கட்சி வேட்பாளர் பைடன் கைப்பற்றி விட்டதாக பிற ஊடகங்கள் கணிக்கின்றன.

இப்போதே அதைக் கூறுவது சற்று முன்கூட்டியது என்று பிபிசி கருதுகிறது.வெவ்வேறு ஊடகங்களில் வெவ்வேறு முன்னிலை நிலவரம் ஏன்?

அமெரிக்க அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

அமெரிக்க அதிபர்கள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதில்லை. அவர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அந்தந்த மாகாணங்கள் ஒரு கட்சிக்கு செல்லும்.

ஒரு மாகாணத்தில் வென்ற கட்சி, அந்த மாகாணத்துக்கான தேர்தல் சபை உறுப்பினர்களை நியமிக்கும். இந்தத் தேர்தல் சபை உறுப்பினர்களே அதிபரைத் தேர்வு செய்வார்கள்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வர மொத்தமுள்ள 538 தேர்தல் சபை உறுப்பினர்களில், 270 அல்லது அதற்கு மேற்பட்ட தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற வேண்டும்.

ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்துக்கும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் சபை உறுப்பினர்கள் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வரும்?

வழக்கமாக, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு, வாக்குப்பதிவு நாளன்று இரவே தெரிந்துவிடும்.

வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு நேரங்களில் வாக்குப்பதிவு முடிவுக்கு வரும். கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் முதலில் வாக்குப் பதிவு முடிவுக்கு வரும். உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

எல்லா வாக்குகளும் தேர்தல் நாளன்று இரவே எப்போதும் எண்ணி முடிக்கப்பட்டதில்லை. ஆனால், வெற்றி பெற்றவர் யார் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் அன்று இரவே எண்ணி முடிக்கப்பட்டிருக்கும்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் அஞ்சல் வழியாகவோ, நேரிலோ வழக்கத்தைவிட நிறைய பேர் சீக்கிரமாகவே வாக்களித்துவிட்டனர்.

அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பு கையெழுத்தும், முகவரியும் சரிபார்க்கப்படவேண்டும். இதனால் அஞ்சல் வாக்குகளை எண்ணுவது இயல்பாகவே தாமதமாகும்.

சில மாகாணங்கள் இந்த நடைமுறையை தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே தொடங்க அனுமதித்தன. எனவே, வாக்குகள் எண்ணப்படுவதற்குத் தயாராக இருந்தன. அதனால்தான் அந்த மாநில முடிவுகள் முன்னதாகவே வெளியாயின.

வேறு சில மாநிலங்களில் தேர்தல் நாளுக்கு முன்பே அஞ்சல் வாக்கு நடைமுறையைத் தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த மாநிலங்களில் என்ன முடிவு வரப்போகிறது என்பது தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால், இந்த மாநிலங்களில் முடிவு தெரிய சில நாள்கள்கூட ஆகலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்குகள் எப்படி எண்ணப்படும்?

பேப்பர் வாக்குச் சீட்டுகளோ, டிஜிட்டல் வாக்குச் சீட்டுகளோ பெரும்பாலானவை இயந்திரங்களால் எண்ணப்படும்.

ஆனால், இயந்திரங்களால் எண்ணமுடியாத வாக்குகளை தேர்தல் பணியாளர்கள் சரிபார்த்து எண்ணிச் சேர்ப்பார்கள்.

வாக்குப் பதிவு முடிந்தவுடன், ஒரு மத்திய தேர்தல் தலைமையகத்துக்கு வாக்குப் பதிவுத் தரவுகள் அனுப்பிவைக்கப்படும். இந்த மத்திய தலைமையகம் என்பது ஒரு சிட்டி ஹால் அல்லது அது போன்ற ஓர் இடமாக இருக்கும்.

பிற இடங்களில், வாக்குப் பதிவு தரவுகளை உள்ளடக்கிய நினைவக கருவிகள் நேரடியாக அனுப்பிவைக்கப்படும். அல்லது, அந்த இயந்திரத்தின் முடிவுகள் தொலைபேசி வாயிலாக வாசிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கைகள் வந்தடைந்தவுடன், அவை அந்த மாநிலத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரியும். அல்லது, தேர்தல் அதிகாரிகள் இந்த எண்ணிக்கையை பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பார்கள்.

பல்வேறு நாட்டின் ஊடகங்களும் அமெரிக்க தேர்தல் குழப்பம் மிகுந்ததாகவும், வன்முறை நடக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியே செய்திகளை வெளியிடுகின்றன.

லாஸ் ஏஞ்சலஸ், சியாடில், மற்றும் மினியபோலீஸில் நடந்த மோதல்கள் குறித்தும், போராட்டங்கள் குறித்தும் இரானின் அரசு வானொலி செய்தி வெளியிட்டது.

"வன்முறை, துப்பாக்கிகள். இது வளர்ச்சி பெறாத அல்லது வளரும் நாடுகளில் தேர்தல் நடக்கும்போது நிகழும் நிகழ்வுகள் ஆகும். சுதந்திரமான நாட்டில், அதாவது அமெரிக்க தேர்தலில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் என்று நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம்" என சீனாவில் கிளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் மற்றும் பிற நகரங்களில் நடந்த போராட்டங்கள் மற்றும் போராட்டக்காரர்கள் - போலீஸார் இடையே நடந்த மோதல் காட்சிகளை ரஷ்ய ஊடகங்கள் ஒளிபரப்பின.

கென்ய செய்தித்தாளில் "அமெரிக்காவின் அவமானம்" என்ற பெயரில் தலைப்புச் செய்தி வெளியானது.

அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் "மிகுந்த குழப்பம்" நிலவுவதாக துருக்கி ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

"ரிச்சர்ட் நிக்ஸன் ராஜினாமாவுக்கு பிறகு அமெரிக்கா மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாக குழப்பத்தில் இருப்பதாக" ஸ்பெயின் நாட்டின் எல் முண்டோ செய்தி வெளியிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க செய்தித்தளமான டெய்லி மேவ்ரிக் அமெரிக்க தேர்தல் தொடர்பாக கார்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் சுதந்திர தேவி சிலையின் கழுத்தில் டொனால்ட் டிரம்ப் கத்தி வைத்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.

டொனால்ட் டிரம்பின் போட்டியாளரான ஜோ பைடன் தேர்தலில் முன்னிலை வகிப்பதாகவும் சில ஊடக செய்திகள் கூறுகின்றன.

"டிரம்பின் வெற்றி தாலிபனின் வெற்றியா? பைடனின் வெற்றி, ஆப்கானிஸ்தானில் குடியரசு தொடரும் என்பதற்கான அறிகுறியா?" என ஆப்கானிஸ்தானின் ராஹே மடனேயட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

1900ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்களிக்கும் உரிமை கொண்டவர்களில் 66.9 சதவீதம் பேர் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

1900ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வில்லியம் மெக்கின்லி ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜென்னிங்க்ஸ் பிரயானை தோற்கடித்தார். அப்போது 73.7சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் இந்த முறையை போன்று அல்லாமல் தேர்தல் முடிவுகள் தெளிவாக அமைந்தன.

அமெரிக்க தேர்தல்கள் குறித்த தகவல்களை வழங்கும் யுனைடெட் எலக்‌ஷன்ஸ் பிராஜக்ட்டின் தலைவர் மைகேல் மெக் டொனால்டு, டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வாக்கு சதவீதம் எண்ணப்பட வேண்டிய வாக்குகளை பொறுத்து மேலும் மாறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முறை தபால் வாக்குகள் அதிக அளவில் வந்துள்ளன எனவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி