இலங்கையின் முன்னணி அரச பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்புடன் தொழிற்கல்வியை வழங்கும் ஒரு தனியார் கல்வி நிறுவனம், பணம் செலுத்தும் மாணவர்களை ஈர்க்கும் பொருட்டு அதன் விரிவுரையாளர்கள் தொடர்பில் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விப் பங்காளராக செயற்படும், வனவிலங்கு மற்றும் இயற்கை விளக்கங்கள் கல்வி நிறுவனம் (AEWNI - Academy of Eco Tourism, Wildlife & Nature Interpretation) அதனுடன் எவ்வித தொடர்பும் இல்லாத, ஒரு விரிவுரையாளராக தனது பெயரை மோசடி செய்துள்ளதாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற கடல் உயிரியலாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

"எனது அனுமதி இல்லாமல், கல்வி நிறுவன விரிவுரையாளராக எனது பெயர் அவர்களின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது" என கலாநிதி ஆஷா டி வொஸ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

"என்னைப் போலவே அனுமதி இல்லாமல் பதிவேற்றப்பட்டிருந்த மற்றுமொரு நபர் ஊடாகவே இதனை நான் அறிந்துகொண்டேன்.  நான் அவர்களது இணையத்தளத்தின் ஊடாகவே இதனை உறுதிப்படுத்தினேன்.  அவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  ஒத்துழைப்பு கிடைப்பதை கண்டறியும் வரையில்,  இதுபோன்ற ஒரு நிறுவனம் இருப்பது கூட எனக்குத் தெரியாது." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடியை வெளிப்படுத்திய ஆஷா டி வொஸ் இலங்கையின் கடல் உயிரியலாளர் மற்றும் வட இந்தியப் பெருங்கடலில் நீல திமிங்கலங்கள் குறித்த ஆராய்ச்சியில் முன்னோடியாக காணப்படுகின்றார்.

அவர் 2008ஆம் ஆண்டில் இலங்கையில் நீல திமிங்கலத் திட்டத்தைத் தொடங்கினார், இது வட இந்தியப் பெருங்கடலில் நீல திமிங்கலங்கள் பற்றிய முதல் நீண்டகால ஆய்வாக கருதப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில், பிபிசி உலகின் 100 பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

இந்த விடயம் தொடர்பில் அறிந்துகொண்ட அவர், பாடநெறி ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கம் கோரி ஒரு மின்னஞ்சல் அனுப்பியதோடு, அந்த நிறுவனத்தில் தான் கற்பிப்பதாக வெளியிடப்பட்ட தகவல்களை அவர்களின் இணையத்தளத்திலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது நிறுவனத்தின் தவறு அல்லவெனவும், நிறுவன இணையத்தளத்தை நிர்வகிப்பவரின் தவறு எனவும்  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பாடநெறி ஒருங்கிணைப்பாளரிடமிருந்து அவருக்கு அனுப்பப்பட்டுள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மறுநாள் காலையில் இணையத்தளத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டதாக தன்னை அடையாளப்படுத்திய ஒருவரிடமிருந்து  அழைப்பு வந்துள்ளது. மேலும் சில கடிதங்கள் பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்டவை. ஆனால் தவறான தகவல் தொடர்பு காரணமாக வேறு யாரோ தவறு செய்திருக்கிறார்கள். இந்த விடயத்தை தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதால் தன்னுடைய வேலையை இழக்க நேரிடும் எனவும் நீண்ட நேரம் உரையாடிய நபர் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு இயலாமை"

கலாநிதி டி வொஸின் இந்த கருத்து வெளியான பின்னர், அவரிடம் மன்னிப்பு கோரி ஒரு குறிப்பை வெளியிட்டுள்ள கல்வி நிறுவனம், அவரது பெயரை வெளியிடுவதற்கு முன்னர் அனுமதி கோருவதற்கு ”இயலாமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளமை  இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.

ஒரு அமைப்புடன் ஒருவர் இணைந்திருப்பதாக யாராவது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால், குறித்த நபரை தொடர்புகொண்டு அவருடன் பேசி இருக்க வேண்டும். அதனை விடுத்து அவர்கள் ஏன் இணையத்தில் இருந்து ஒரு புகைப்படத்தைத் திருடி, தவறான வாழ்க்கை வரலாற்றுத் தரவை இணைத்து வெளியிட வேண்டும். என கலாநிதி டி வொஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற கற்றை நெறிகளுக்கு பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதாகவும், மேலும் பணம் செலுத்தும் கற்றை நெறிகளுக்கு  மாணவர்களை கவர்ந்திழுக்க தவறான தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை ஈர்க்க எந்தவொரு தந்திரோபாயத்தையும் பயன்படுத்த அவர்கள் தயாராக இருப்பதாக இது காட்டுகிறது எனவும், தன்னை மட்டுமல்ல, பட்டியலில் உள்ள மற்றவர்களின் ஒப்புதலையும் அவர்கள் பெறவில்லை எனவும் தனது டுவிட்டர் கணக்கில் டி வொஸ் குறிப்பிட்டுள்ளார்.

இணைய வீண்பேச்சு

சான்றிதழ்கள், டிப்ளோமாக்கள், உயர்  டிப்ளோமாக்கள் மற்றும் விஞ்ஞானமானிப் பட்டங்களை வழங்கும் இந்த நிறுவனம், தனது பல்கலைக்கழகத்தில் அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களைக் கொண்ட ஒரு குழுவை கொண்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக  டி வொஸ் தெரிவிக்கின்றார்.

எவ்வாறெனினும், அவர்கள் இப்போது 25,000 ரூபாய் முதல் 55,000 / ரூபாய் வரை கட்டணங்களாக குறிப்பிட்டு, சான்றிதழ் மற்றும் உயர் சான்றிதழ் உள்ளிட்ட 4 பாட நெறிகளுக்கு மாத்திரமே விண்ணப்பங்களை கோரியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

வனவிலங்கு மற்றும் இயற்கை விளக்கங்கள் கல்வி நிறுவனம் எனப்படுவது சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அரச-தனியார் நிறுவனமாகும். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், பேராதெனிய பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் குழுவால் இந்த கற்கை நெறிகள் தயாரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் வனவிலங்கு மற்றும் இயற்கை விளக்கங்கள் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து ஜனவரி 24ஆம் திகதி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானப் பீடம் கேட்போர் கூடத்தில் நடத்திய, விழாவிற்கான அழைப்பில் இவ்வாறு அமைந்திருந்தது.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி