கேன்கள் மற்றும் பெரல்களுக்கு எரிபொருளை விநியோகிப்பது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக,
இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கேன்கள் மற்றும் பெரல்களுக்கு எரிபொருளை நிரப்பிக்கொள்வதற்காக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற வரிசைகளை உருவாக்கி பாவனையாளர்கள் தன்னிச்சையாக குவிவதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, மேற்படி தீர்மானம் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு முரணாக செயற்பட்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதுமான எரிபொருள் இருப்பு இருந்தும், நுகர்வோர் தேவையற்ற அச்சத்தை உருவாக்கி இவ்வாறு செயல்படுவதாகத் தோன்றுவதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கேன்கள் மற்றும் பெரல்களுக்கு எரிபொருளை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.