டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் (Mossad) மையத்தைத் தாக்கியதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே 5ஆவது நாளாக அதிகரித்து வரும் வான்வழிப் போருக்கு மத்தியில், இன்று டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் மையத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதுகுறித்த அறிக்கையில், "இஸ்ரேலின் சியோனிச ஆட்சி இராணுவத்தின் இராணுவ புலனாய்வு மையமான அமானையும், டெல் அவிவில் உள்ள சியோனிச ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கை திட்டமிடல் மையமான மொசாட்டையும் தாக்கினோம். அது தற்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது" என்று கூறியது.
இன்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது பலத்த குண்டுமழை சத்தம் கேட்டதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. மேலும், ஈரானிய ஏவுகணைகள் வருவது குறித்து இஸ்ரேல் இராணுவம் எச்சரித்தது.
"சிறிது நேரத்துக்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன. ஏவுகணை அச்சுறுத்தலை அகற்ற, தேவையான இடங்களில் அவற்றை இடைமறித்து தாக்குவதற்கு செயல்பட்டு வருகிறோம்" என்று இராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பல பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட இடங்களை விட்டு வெளியேற மக்கள் அனுமதிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்தது. ஏவுகணைகள் விழுந்த இடங்களில் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் இராணுவம் கூறியது.
இதனிடையே, மேற்கு ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது செவ்வாய்க்கிழமை இரவு "பல விரிவான தாக்குதல்களை" நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேல் இராணுவத்தின் அறிக்கையில், "இந்த தாக்குதல்களின் போது, ஈரானில் உள்ள டஜன் கணக்கான ஏவுகணை சேமிப்பு மற்றும் ஏவுதல் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. மேலும், மேற்கு ஈரானில் தரையிலிருந்து வான் நோக்கி தாக்கும் ஏவுகணைகள் மற்றும் யுஏவி சேமிப்பு தளங்கள் தாக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.
“ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்!”
“இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிக்கொண்டே இருந்தால், தெஹ்ரான் எரிந்துவிடும்' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர், ஈரானை எச்சரித்தார்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது. ஈரானில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு முக்கிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் மக்கள் மீது ஏவுகணைகளை வீசிக்கொண்டே இருந்தால்,'ஈரான் தலைநகர் தெஹ்ரான் எரிந்துவிடும்' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
“ஈரான் சர்வதிகாரி, அந்நாட்டு மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இதற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரம் வந்துவிட்டது. குறிப்பாக தெஹ்ரானின் குடியிருப்பாளர்கள் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு செய்து வரும் தீங்கிற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இஸ்ரேலில் வசிக்கும் மக்களின் வீடுகள் மீது, தொடர்ந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினால் ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரிந்துவிடும்” என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரின் எச்சரிக்கை இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் சம்பவங்கள் தொடரும் என்பதை எடுத்துரைக்கிறது.