புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவ என்பவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்தின்
பிரதான சந்தேகநபர், புத்தளம் - பாலாவி பகுதியில் வைத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் வீரர் எனத் தெரியவந்துள்ளது.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் வைத்து கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல சட்டத்தரணிகள் போல் வேடமணிந்த இருவர் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
வழக்குரைஞர் போல் மாறுவேடமிட்டு நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்த நபர், பின்னர் சட்டத்தரணி போல் வேடமணிந்த குறித்த பெண்ணிடம் இருந்து துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணைகள் பல கோணங்களில் இருந்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிதாரி மற்றும் சந்தேக நபர்களை வெகு சீக்கிரத்தில் கைது செய்வதாகவும் தொடர்ந்தும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை துப்பாக்கிதாரியை ஏன் கைது செய்ய முடியவில்லை என்று ஊடகவியலாளர்கள் வினா எழுப்பிய பொழுது,
துப்பாக்கிதாரி தனது துப்பாக்கியால் கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுவிட்டு உள்ளே துப்பாக்கி சூடு நடக்கிறது என்று கூவிக் கொண்டு வெளியில் தப்பி ஓடியுள்ளார்.
துப்பாக்கி சத்தத்தில் மிரண்ட மக்களும் அலறியடித்துக் கொண்டு வெளியில் சென்றதால் சந்தேக நபரை அடையாளம் காண முடியவில்லை.
அதேவேளை அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த காவலர்கள் நீதிபதியையும் நீதிமன்ற உத்தியோகத்தர்களையும் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தியிருந்தனர்.
ஆகவே துப்பாக்கிதாரியை பிடிக்க எந்த சந்தர்ப்பமும் ஏற்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருடன் மற்றொரு பெண்ணும் வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபரான பெண் வழக்கறிஞர் போல் உடையணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன், பின்னர் அந்த பெண் துப்பாக்கியை சந்தேக நபரிடம் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் வகை துப்பாக்கி, வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் குற்றவியல் நடைமுறைச் சட்ட புத்தகத்தை வெட்டி, மறைத்து வைத்திருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன, நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு, வெளியேற முயன்ற போது, அவருக்கு அருகில் சென்று அவரது மார்பில் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதேவேளை கணேமுல்ல சஞ்சீவ தொடர்பான விசாரணைகளில் அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கொழும்பு தலைமை நீதிமன்ற பதிவாளருக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (19) உத்தரவிட்டார்.
மேலும், சம்பவம் தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் புலனாய்வுப் பிரிவுகளுக்கு வழங்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
சஞ்சீவ உயிரிழப்பு தொடர்பாக வாழைத்தோட்ட பொலிஸார் தாக்கல் செய்த பி அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த பி அறிக்கையை வாழைத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் சுஜித் பிரியந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சம்பவம் குறித்து புகார் அளித்த பொலிஸ் அதிகாரிகள், அந்த நேரத்திலேயே விரிவான விசாரணை தொடங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.