புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து எதிர்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் குழப்ப நிலையேற்பட்டது.
இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாளாந்தம் கொலைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் இதற்கு தீர்வை காண்பதற்கு உடனடி தீர்வு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சட்டமொழுங்கை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு எதிர்கட்சி தயாராகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படுவதாகவும் வெளிநாட்டிலுள்ள பாதாள கோஷ்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷ
நாட்டின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்குக் குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் எங்கும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்தது.
இவ்வாறு அரசாங்கம் குறிப்பிட்டு ஓரிரு நாட்களில் கொலைச் சம்பவங்களே அரங்கேறியுள்ளன என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்தை சுட்டிக்காட்டி நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியிருந்தார்.
மேலும் இன்றைய தினம் நீதிமன்றத்திற்குள் நீதிபதியின் முன்பே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
உயிரிழந்தவரின் நடத்தை எவ்வாறு இருப்பினும் நீதிமன்றத்திற்குள் இவ்வாறான அசம்பாவிதங்கள் அரங்கேறுவது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடு என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேபோல் அண்மையில் மன்னார் நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையும் நினைவுபடுத்தியிருந்தார்.
இவ்வாறான சூழலில் எவ்வாறு நாட்டிற்கு முதலீட்டாளர்களை அரசாங்கம் அழைக்க முடியும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்வாறான கொலைச் சம்பவங்கள் அரங்கேறுவது நாட்டின் சுற்றுலாத்துறையையும் பாதிக்கும் எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் அச்சாறு போன்று உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல
எவ்வாறாயினும், புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
“துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.