பாறுக் ஷிஹான்

ஜனாஸா எரிப்பை நிறுத்தாது

கோட்டாபய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரிந்தது.நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தோம். எந்தக் கடிதத்துக்கும் அவர் பதில் தரவில்லை என   ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாறக் அப்துல் மஜித் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தான் ஜனாதிபதியாக இருந்து  ஏன் விரட்டி அடிக்கப்பட்டேன் என்பதை புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார் .என்னை பொறுத்த வரையில் இந்த நூலானது தற்போது வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றே கூற முடியும்.

இந்த நூலை எழுதிவிட்டு அவர் இறந்த பின்னர் இந்த புத்தகம் வெளிவந்து இருந்தால் அவருக்கு ஓரளவு நல்ல பெயரை அவருக்கு கொடுத்திருக்கும்.இப்போது இந்த நூலை அவர் வெளியிட்டு தான் ஒரு குற்றமும் செய்யவில்லை .தன்னை சிலர் பழிவாங்கி விட்டார்கள் என்பது போன்று கூறுகின்றார்.

ஆனால், அவர் வெளியிட்ட நூலை இன்னும் நான் படிக்கவில்லை. அது தொடர்பில் வெளிவந்த செய்திகளை நாங்கள் பார்க்கின்றபோது கோட்டாபய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரிகிறது.

நாடு இவ்வாறு தான் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தோம்.ஜனாஸா எரிப்பை நிறுத்துங்கள். அது தொடர்பில் பேச எங்களுக்கு அனுமதி தாருங்கள் என கேட்டிருந்தோம்.இது குறித்து பேச பல கடிதங்கள் அனுப்பினோம் எந்த கடிதத்துக்கும் அவர் பதில் தரவில்லை.

ஒரு பெருமை பிடித்த மனிதனாக அவர் காணப்பட்டதனால் தான் இறைவன் அவருக்கு தண்டனை கொடுத்து இந்த நாட்டின் வரலாற்றிலே எந்தவொரு ஜனாதிபதிக்கும் நிகழாத ஒன்றை வழங்கியிருந்தான். நாட்டை விட்டு ஓடி ஒளியும் கேவலமான நிலைக்கு கோட்டாபய சென்றார்.

இவரது நூல் தற்போதுள்ள இனவாத சிந்தனையுடைய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ஜனாதிபதியின் அதிகாரம் என்பது சாதாரணமான அதிகாரமல்ல. சர்வதிகாரம் கொண்ட ஒரு அதிகாரமாகும். இந்த அதிகாரத்தை அவர் வைத்துக் கொண்டு மஹிந்த உட்பட  தனக்கு ஆதரவாக செயற்பட்ட கட்சிகளை ஒதுக்கினார்.

ஒரு கர்வம் உள்ள நபராக செயற்பட்ட காரணத்தினால் தான் அவர் தலை குப்புறமாக விழுந்தார்.இவ்வாறு விழுந்ததற்காக சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் பழி போடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அவர் ஒரு நேர்மையான மனிதனாக இருந்திருந்தால் வெளியிட்ட புத்தகத்தில் தான் தவறு செய்தமையினால் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓடி ஒளிய வேண்டி ஏற்பட்டிருந்தது என்பதை பகிரங்கமாக ஏற்று எழுதி இருந்தால் உண்மையில் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும்.

யுத்த காலங்களில் கோட்டபாய ராஜபக்க்ஷ ஒரு ஹிரோவாக இருந்தார் என கூறப்பட்டாலும் முதலாவது ஹீரோவாக மகிந்த ராஜபக்க்ஷவே இருந்தார். இவர் இரண்டாவது ஹிரோவாக இருந்தார் என்பதையே இங்கு கூற முடியும்.மஹிந்த ராஜபக்ஷ தான் நாட்டினையும் யுத்தத்தையும் அக்காலப்பகுதியில் சரியாக கொண்டு சென்றவர்.அவரத உத்தரவினை செயற்படுத்தும் நபராகவே கோட்டபாய ராஜபக்ஸ என்பவர் இருந்தார்.

ஆனால் சில சினிமா படங்களில் ஜோக்கர்கள் சிலவேளை கதாநாயகர்களாக மாறுகின்ற  மாதிரி தன்னால் தான் யுத்தம் நிறைவுபெற்றது என்ற திமிர் அவரிடம் காணப்பட்டது. இப்போது அவர் ஒரு பூச்சியமாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு நூலை எழுதி அரசியலுக்கு மீண்டும் வருவார் என சிலர் நினைக்கின்றார்கள்.என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி