அம்பாறையில் தனது இரு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தந்தையொருவர் உயிர்மாய்ப்பதற்கு முயன்ற சம்பவம் பெரும்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (14) காலை இடம்பெற்றிருந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மன நலம் பாதிக்கப்பட்ட தனது இரு பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்த நிலையில், மனைவியின்  இழப்பு தன்னை வெகுவாக பாதித்திருந்ததாகவும் இதனால்  எனது பிள்ளைகளை பராமரிப்பதற்கு  சிரமமாக இருந்த காரணத்தினால்தான் இவ்வாறு செயற்பட்டதாக, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை தனது வாக்குமூலத்தில்  தெரிவித்திருக்கின்றார்.

அம்பாறை பெரியநீலாவணை முஸ்லீம் பிரிவு மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜும்மா வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம் (14) காலை 8 மணியளவில் குறித்த இரட்டை கொலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் மனைவியின் இழப்பின் பின்னர் தனது மன நலம் பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளையும் பராமரித்து வந்த தந்தை,  வாழ்க்கையில் விரக்தி அடைந்திருந்த நிலை அவரது அண்மைக்கால செயற்பாட்டில் உணர முடிகின்றது.

அதாவது, தனது மனைவியின் நோய் கால கட்டத்தில் அவரை பராமரிக்க மற்றும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கு ஒரு சிற்றூர்தியை கொள்வனவு செய்திருந்தார்.

இந்த சிற்றூர்தியை சம்பவ தினத்திற்கு முன்னர் மற்றுமொரு தரப்பினருக்கு விற்பனை செய்திருந்ததாகவும் மறுமணம் செய்வதற்கு ஆர்வமாக அவர் இருந்த போதிலும் தனது மன நலம் பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளை சுட்டிக்காட்டி தடைபட்டதாகவும், அமைதியான மென்மையான போக்குள்ள அமைதியான ஒரு மனிதன் என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனைவிட தந்தையினால் கொல்லப்பட்ட இரு பிள்ளைகளும், அப்பகுதியில் உள்ள மன நலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை அனுமதிக்கும் பாடசாலையொன்றில் கல்வி கற்பதற்கு அனுமதித்திருந்தார்.

இருந்த போதிலும் அவரது மனைவியின் இறப்பின் பின்னர் அப்பிள்ளைகளை அப்பாடசாலைக்கு அனுப்புவதை இடை நிறுத்தி கொண்டார் என்ற மற்றுமொரு தகவலும் வெளியாகி இருந்தது.

இக்குடும்பத்தில் படுகொலை செய்யப்பட்ட மன நலம் பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளை தவிர வெளிநாடுகளில் தொழில் புரிந்த ஏனைய இரு பிள்ளைகளும், அண்மையில் மரணமடைந்த தாயின் மரண சடங்கில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து கலந்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையில் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் தினமும் அருகில் உள்ள மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜும்மா மஸ்ஜிதில் தொழுகையையும் விடாமல் செய்து இறைபணியை முன்னெடுத்தவர் என்பதுடன் ஏனைய மக்களோடு இணைந்து செயற்படுபவர் என மக்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.

அதன் பின்னர் சம்பவ வீட்டிற்கு உடனடியாக வந்த சகோதர சகோதரிகள் அங்கு கண்ட காட்சியை கண்டு அபயக்குரல் எழுப்பியதுடன் கத்தியோடு கொலை செய்து காணப்பட்ட தனது சகோதரனை அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பொதுமக்களின் உதவியுடன் அழைத்து சென்றனர்.

பின்னர் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்துடன் காணப்பட்ட முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 15) ஆகியோரின் நிலை கண்டு அவ்விடத்தில் வந்திருந்த உறவினர்கள் மக்கள் தங்களை அறியாமல் இந்த நோன்பு(ரமழான்) மாதத்தில் இவ்வாறு நடந்து விட்டதே என கதறி அழுது பெரிய நீலாவணை பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவம் தொடர்பில்  பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார்  சடலங்கள் காணப்பட்ட வீட்டிற்கு உரிய பாதுகாப்பினை வழங்கினர்.

தடயவியல் பொலிஸாரும் மோப்ப நாய் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் அங்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு இறுதியாக பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலை அனுப்பி வைக்கப்பட்டதுடன் நேற்றிரவு இரவு இரு பிள்ளைகளின் சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உயிரிழந்த இரு பிள்ளைகளின் சடலங்களும் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து இரு சகோதரர்களின் வருகைக்காக காத்திருப்பதாக உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி