1200 x 80 DMirror

 
 

இலங்கையின் அமைச்சரவையில் திடீர் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இரு அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.



புதிய நியமனங்களின்படி, சபையின் தலைவரும் தற்போதைய கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன புதிய கைத்தொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


அத்தோடு, எஸ்.பி. திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும் மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும், எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகேயும், போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும் இருந்தனர்.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோரின் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, புதிய எரிசக்தி அமைச்சராக தாம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று இடம்பெற்ற திடீர் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி, புதிய மின்சக்தி அமைச்சராக போக்குவரத்து அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகவும் அமைச்சர் லொக்குகே தெரிவித்தார்.

சபாநாயகர் தினேஷ் குணவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் இதன் போது பிரசன்னமாகியிருந்த போதிலும், அவர்களுக்குப் புதிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டது தொடர்பில் எதுவும் தெரியாது என கூறப்படுகின்றது.

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் பல மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சுப் பதவிகளில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ள அதேவேளை, இரண்டு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட அணியினர், அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதாகவும் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அணியினருக்கு எதிராக ஜனாதிபதி கடும் முடிவை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் நேற்று தெரிவித்திருந்தார்.

நாட்டிற்குள் பாரதூரமான பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலைமையில், இந்த அணியனர், அந்த நெருக்கடியை மேலும் உக்கிரமடைய செய்து மேற்கொள்ளும் இப்படியான செயல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரமித பண்டார தென்னகோன் கூறியிருந்தார்.

இனி வரும் காலங்களில் அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் வீரவங்ச ஆகியோர் கலந்துக்கொள்ளும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை எனவும் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி