ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிப்பதில் இருந்து இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் விலகி இருந்தமையானது இலங்கையின் நன்மைக்காகவே அது சர்வதேச கருத்தை கையாளும் முயற்சி என்றும் இது வெற்றியின் அறிகுறியாகும் என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஜெனீவா வாக்கெடுப்பு இலங்கைக்கு கிடைத்த வெற்றி என்று கூறிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை சமூக ஊடகங்கள் கடுமையாக தாக்கிய போதிலும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஊடக பிரிவு இதுபோன்ற அறிக்கை ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளது.
"சர்வதேச சமூகத்தின் கருத்தை வென்றெடுக்க நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை இது காட்டுகிறது. அனைத்து ஆசிய நாடுகளும் எங்கள் கருத்துக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன" என்று அவர் கூறினார்.
அமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தத் தீர்மானம் நியாயமற்றது மற்றும் ஐ.நா. சாசனத்தின் விதிகளுக்கு எதிரானது. எங்களது முப்படை வீரர்கள் 2009 ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மூன்று தசாப்த கால மிருகத்தனமான போரை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உலகின் மிக மிருகத்தனமான பிரிவினைவாத பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க முடிந்தது. இரண்டு உலகத் தலைவர்களை படுகொலை செய்த ஒரே பயங்கரவாத அமைப்பு புலிகள் மட்டுமே. இந்தியாவில் ராஜீவ் காந்தியைப் போலவே, இலங்கையில் ரணசிங்க பிரேமதாசவையும் தற்கொலை குண்டுதாரிகள் படுகொலை செய்தனர்.
மனித உரிமைகளை மதிக்கும் எந்தவொரு நாடும் கொலைகார எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளை தோற்கடிப்பதும், சிங்கள, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பேகர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைக்கான உரிமையை உறுதி செய்வதையும் அங்கீகரிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார். பொதுப் பாதுகாப்பை நிறுவுவது உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான ஒரு ஆதாரமற்ற தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வர பல மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுத்தன. அவர்கள் தீர்மானத்தை ஒரு அரசாங்கத்திற்கு எதிராக அல்ல, இலங்கை மக்களின் அபிலாஷைக்கு எதிராக கொண்டு வந்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
நல்லாட்சியின் அரசாங்கம் அந்த நாடுகளுடன் இணைந்து நமது நாட்டிற்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. (30-01) உலகின் எந்த நாடும் தனது சொந்த நாடுகளுக்கு எதிரான மனித உரிமை தீர்மானங்களை ஆதரிக்கவில்லை.
கடந்த தேர்தலில் நாங்கள் மக்களிடம் ஆணை கேட்டோம். இந்த நாட்டிற்கு எதிரான தீர்மானங்களிலிருந்து விலகுவதற்கு ஒப்புதல் தருமாறு, அவர்கள் எங்களுக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தார்கள். இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் பயங்கரவாதத்திற்கு எதிரான நமது மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி கட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட நேரத்தில் பயங்கரவாதிகளைப் பாதுகாக்க முயன்ற நாடுகளே இவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் அனைத்து நாடுகளினதும் மனோநிலையை சிதைப்பதே அவர்களின் நோக்கம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.