"தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களிலேயே கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அதிகரிப்பு தேவையாக உள்ளது. எனினும் புதிய முன்மொழிவுகளில் அவை உள்வாங்கப்படாது

புறக்கணிக்கப்பட்டே உள்ளது" என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் பின்வருமாறு குறிப்பிட்டார்..

"தற்பொழுது நாடு முழுவதும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் மீள் நிர்ணயம் தொடர்பான முன்மொழிவுகள் பெறப்பட்டு வருகின்றது. அவை பிரதேச செயலக மட்டத்திலே தயார் செய்யப்பட்டு, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதியுடன், மீள் நிர்ணய ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்படுகின்றது.

கண்டி மாவட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள், உரிய தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. குறிப்பாக, தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களிலேயே கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அதிகரிப்பு தேவையாக உள்ளது. எனினும் புதிய முன்மொழிவுகளில் அவை உள்வாங்கப்படாது, புறக்கணிக்கப்பட்டே உள்ளது.

கண்டி மாவட்டத்தின் மிக அதிகமான சனத்தொகையையும், பரப்பளவையும் கொண்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிகமாக இருப்பது தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் ஆகும். விசேடமாக, முஸ்லீம் மக்கள் வாழுகின்ற பகுதிகளும், அதே போன்று, பெருந்தோட்ட பகுதிகளும் இத்தகைய நிலையில் உள்ளது. அப்பகுதிகளில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அதிகரிக்கவே கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். எனினும் பிரதேச செயலக மட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் அத்தேவையை பூர்த்தி செய்யாது உள்ளது.

குறிப்பாக, கம்பளை உடபலாத்த, தொழுவ பிரதேச செயலக பிரிவுகள், நாவலபிட்டிய, பஸ்பாகே கோரல, குண்டசாலை மற்றும் அக்குறணை பிரதேச செயலக பிரிவுகளில் பொருத்தமான முன்மொழிவுகள் செய்யப்படவில்லை. சனத்தொகை நான்காயிரம், ஐயாயிரத்திற்கு அதிகமான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கூட, இரண்டாக பிரிப்பதற்கு சிபாரிசு செய்யப்படவில்லை.

நிர்வாக அதிகார பகிர்வின் முக்கியமான ஒரு அம்சமாக கிராம உத்தியோகத்தர் பிரிவு காணப்படுகின்றது. அதே போன்று அரசியல் அதிகார பகிர்விற்கான முக்கியத்துவத்தையும் இது அதிகரிக்கின்றது. பல ஆண்டுகளுக்கு ஒரு தடவையே இந்த மீள் நிர்ணயம் நடைபெறுகின்றது. எனவே இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது. இது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் கடப்பாடாகும். அதிலும் அரசாங்க தரப்பில் உள்ள எங்கள் பிரதிநிதிகள் இவை தொடர்பாக தேடி பார்த்து அவசியமான அழுத்தங்களை அரசசுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது இருப்பது ஏன் என்பதே கேள்வியாக உள்ளது."

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி