யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது, நீல நிற 'யுனிசெவ்' புத்தகப் பையோடு அடையாளம்
காணப்பட்ட மனித என்புத் தொகுதிக்குக் கீழே பாதணிஒன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் ஐந்தாம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 33 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றை முழுமையாக அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளே நேற்று மேற்கொள்ளப்பட்டன.
முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்த இரண்டு சிறுவர்களின் என்புத் தொகுதிகள் நேற்று புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுத்து ஆய்வுக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் அகழ்வின்போது ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிற 'யுனிசெவ்' புத்தகப் பையோடு நேற்று முன்தினம் அடையாளம் கானப்பட்ட மனித என்புத் தொகுதிக்குக் கீழே பாதணி (சாண்டில்ஸ்) ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த என்புத் தொகுதியைச் சூழ ஆடை மற்றும் நீல நிற 'யுனிசெவ்' புத்தகப் பை, கண்ணாடி வளையல் என்பன முன்னைய அகழ்வின்போது அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் ஆடைகளோ, வேறு வகையான பொருட்களோ மீட்கப்படாத நிலையில் குறித்த என்புத் தொகுதிக்கு அருகில் மாத்திரமே வேறு வகையான பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரனித்தா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்பாக நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி சித்திபாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் ஐந்தாம் நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதுவரையான அகழ்வில் 33 மனித எலும்புத் தொகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகள் தொடர்பாக நிபுணர்கள் வேலை செய்ய வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் நேற்று பகல் பொழுதில் மட்டும் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மட்டத்தில் உள்ள எலும்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து குழப்பமான சூழலில் இருப்பதால் சரியான விதத்தில் ஆய்வொன்றைச் செய்து தெளிவான விதத்தில் சரியாக அகழ்ந்த எடுப்பதற்கு நேரம் எடுக்கும் என்பதால் நேற்று புதிதாக எதுவுமே அடையாளப்படுத்தப்படவில்லை.
சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால் குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.