கஹவத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மற்றொரு இளைஞர் காயமடைந்த நிலையில் கஹாவத்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹவத்த - கொஸ்கெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று இரவு வந்த நான்கு பேர், வீட்டிலிருந்து இரண்டு இளைஞர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் இருவரும் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், 27 வயதுடைய இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார், எதற்காக என்பது இன்னும் தெரியவில்லை, மேலும் கஹவத்த பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.