தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் திட்டத்துக்கமைய, இலங்கையின் சகல மாவட்டங்களிலும் எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்படவுள்ளது.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான எழுத்தாளர் சங்கம் உருவாக்குவதுத் தொடர்பான கூட்டம், மாவட்ட உதவிச் செயலாளர் ஆ.நவேஸ்வரனினதும் மாவட்ட கலாசாரத் திணைக்களத்தினதும் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நேற்று (17) நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சின் சுற்று நிரூபத்துக்கு அமைய, மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா 3 பேரைக் கொண்டதாக மாவட்ட எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட வேண்டும்.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தலா 3 பேர் வீதம் மொத்தமாக 42 நபர்கள் தெரிவுசெய்யப்பட்டு மாவட்ட எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

இதன்போது எழுத்தாளர் சங்க உறுப்பினர் தெரிவுகள் நடைபெற்றன. இதன்படி, மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்க நிறைவேற்றுத் தலைவராக மாவட்டச் செயலாளர் செயற்படுவதுடன், தலைவராக கலாநிதி முருகு தயாநிதி, உப தலைவர்களாக இரா.தவராஜா, கே.நௌஷாத், செயலாளராக வீ.மைக்கல் கொலின் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

அத்துடன், உப செயலாளராக திருமதி சுதாகரி மணிவண்ணன், பொருளாளராக கதிரவன். ரீ.இன்பராசா மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக திருமதி ரூபி வலன்டினா பிரான்சிஸ், ஜீனைதா ஷெரீப், ஏ.சீ.அப்துல் ரஹீமான், கே.அருளம்பலம், கலாபூஷணம் கே.தணிகாசலம், ஜிப்ரி ஹசன் ஆகியோரும் சபையோரால் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

எழுத்தாளர்களின் செயற்றிறனை விருத்தி செய்தல், துறைசார் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்தல், சிறந்த ஆக்கங்களை உருவாக்குதல், எழுத்தாளர்களுக்கான உதவி, வழிகாட்டல், ஆலோசனை என்பவற்றை ஒரு கட்டமைப்பு ரீதியான செயற்பாட்டினூடாக வழங்குவதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி