1200 x 80 DMirror

 
 

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன், பெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு அது தீவிரமடைந்துள்ளது. இதேவேளை பெண் பிரதி பொலிஸ் மா அதிபரின் நியமனத்தை அங்கிகரிக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இத்தகைய செயற்பாடுகளை மாற்றி அமைக்கும் முகமாக, எமது கட்சியில் காணப்படும் முக்கிய பொறுப்புகளில் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும். இதற்கு கட்சி தலைவர் ஒத்துழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர்தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கையை பொருத்தமட்டில் முதல் பெண் பிரதமரை உருவாக்கியமை தொடர்பில் பெருமைக் கொள்வதுடன், பெண் ஜனாதிபதியொருவரும் பதவிவகித்துள்ளார் என்று பெருமிதம் கொள்ள முடியும். இவ்வாறு ஆரம்பத்தில் பெண்களுக்கு பல முதல்நிலை பொறுப்புகளை வழங்கிய எமது நாட்டில் இன்றைய பெண்களின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது. உலக சனத்தொகையில் பெண்களின் எண்ணிக்கையே மிக அதிகமாக காணப்படுகின்றது.

பெண்கள் தங்களது குடும்பத்திற்கு மட்டுமன்றின் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். பணிப்பெண்களான வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள், தேசிய வருமானத்திற்கு பெரும் உந்துசக்தியாக செயற்பட்டு வருகின்றார்கள். எனினும் கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் அவர்களது நிலைமை பெரும் நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளது. இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மத்தியிலே அவர்கள் மேலும் சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அதற்கமைய பெண் பிரதி பொலிஸ்மா அதிபரின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நபர்களிருக்கும் இந்த நாட்டில், தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலைச் செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. வீட்டை விட்டு வெளியேறும் பெண்களின் கழுத்திலிருக்கும் தங்கச் சங்கிலிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை இதனை மாற்றி அமைக்க வேண்டும். இதன் ஆரம்ப கட்டமாக எமது கட்சியிலுள்ள பிரதான வெற்றிடங்களில் பெண்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துழைப்பு வழங்குவார் என்று எண்ணுகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்திலிருந்தே பெண்களின் நலன் கருதி சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதனைப்போன்று தொடர்ந்தும் பெண்களுக்கான சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி