கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, வைத்தியசாலை சுகாதார கனிஷ்ட உத்தியோகத்தர்கள் இன்று (17) அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணி தொடக்கம் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கத்தின் தலைவர் சமிந்த நிலந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 25 மாவட்டங்களிலுமுள்ள வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
மேலதிகமாக பணிபுரியும் 08 மணித்தியாலங்களுக்கு பல வருடங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை என ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கத்தின் தலைவர் சமிந்த நிலந்த கூறியுள்ளார்.
இதேவேளை, பதில் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் இதனால் அவர்களுக்கான எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தப்படும் காலப்பகுதியில் சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை எனவும் சமிந்த நிலந்த தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இன்று பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கத்தின் தலைவர் சமிந்த நிலந்த சுட்டிக்காட்டியுள்ளார்.