அடக்குமுறைக்கு தான் அடிபணியப் போவதில்லையென்றும் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும் பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் வி.கே. சசிகலா தெரிவித்திருக்கிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவின் தண்டனைக் காலம் கடந்த ஜனவரி 27ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஆனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், சில நாட்கள் கர்நாடக மாநிலத்திலேயே தங்கி சிகிச்சை பெற்றார்.

அதற்குப் பிறகு திங்கட்கிழமை காலையில் பெங்களூருக்கு அருகே உள்ள தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்டார் சசிகலா. வழிநெடுக அவரது ஆதரவாளர்களும் அ.ம.மு.க. தொண்டர்களும் அவருக்கு வரவேற்பளித்தனர்.

இந்த நிலையில், வாணியம்பாடி அருகில் வாகனத்தை நிறுத்திப் பேசிய சசிகலா, "அடக்கு முறைக்கு நான் அடிபணியப் போவதில்லை," என தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, "நிச்சயமாக" என்று அவர் பதிலளித்தார். அ.தி.மு.க அலுவலகத்திற்கு செல்வீர்களா என்று கேட்டபோது, 'பொறுத்திருந்து பாருங்கள்" என்றார் சசிகலா.

ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "இதெல்லாம் எதைக் காட்டுகிறது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று தெரிவித்த சசிகலாவிடம், "அதிமுக கட்சியைக் கைப்பற்றுவீர்களா?" எனக் கேட்கப்பட்டது. அதற்கு, "விரைவில் எல்லோரையும் சந்திப்பேன். அப்போது விரிவாக பேசுகிறேன்" என்று பதிலளித்தார்.

பெங்களூரு முதல் சென்னை வரை சசிகலாவுக்கு 56 இடங்களில் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், அவர் மெதுவாகவே பயணம் செய்து சென்னைக்கு இரவில் வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி