ஈரான் மீது இன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் மிக மோசமான தாக்குதலை நடத்தியிருந்தது. இதற்கு ஈரானும் பதிலடி
கொடுக்கவே பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேரடியாகவே எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதங்கள் குறித்து ஈரானிடம் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் ஈரான் மீது திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் ஈரான் தளபதி, அணு விஞ்ஞானிகள் உட்பட பலரும் கொல்லப்பட்டனர்.
மத்திய கிழக்கில் பதற்றம்
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் நேரடியாக ஈரானை எச்சரிக்கும் வகையில் ஜனாதிபதி ட்ரம்ப் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து முன்பே தனக்குத் தெரியும் என்றும் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இப்போது ஈரான் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் என நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். உலகின் மிகவும் ஆபத்தான ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளன என்று குறிப்பிட்ட ட்ரம்ப், அவற்றில் பல இஸ்ரேலிடம் உள்ளன என்றும் அவற்றை ஈரான் மீது பயன்படுத்தக்கூடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பின்னணி
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளை ஈரான் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஈரான் வசம் அணு அயுதம் இருந்தால் ஆபத்து எனக் கருதும் அமெரிக்கா அதைத் தடுக்க முயன்று வருகிறது. இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அதில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தச் சூழலில் தான் இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரான் படையின் தளபதி ஹொசைன் சலாமி உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
ட்ரம்ப் எச்சரிக்கை
அதைத் தொடர்ந்தே ஈரான் நாட்டிற்கு ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ட்ரம்ப், "ஈரான் இந்த விவகாரத்தில் ஒரு டீல் போட நான் பல வாய்ப்புகளைக் கொடுத்தேன். எச்சரிக்கும் வகையில் கூட பேசி பார்த்தேன். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும், அவர்கள் ஒத்து வரவில்லை. நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவிடம் இதுவரை பலரும் கேள்விகூட படாத பல இராணுவத் தளவாடங்கள் உள்ளன. அதில் பல ஆயுதங்கள் இஸ்ரேலிடமும் உள்ளன. அதை எங்கே எப்போது பயன்படுத்தலாம் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்” என எச்சரித்திருந்தார்.
நிலைமை மோசமாகும்!
"சில ஈரான் தலைவர்கள் தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினார்கள். ஆனால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. அவர்கள் எல்லாரும் இப்போது இறந்துவிட்டார்கள். இந்த தாக்குதல்கள் வரும் காலங்களில் மேலும் மோசமாகத்தான் இருக்கும்" என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் மேலும் தெரிவித்தார். இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், ட்ரம்பின் இந்த எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
டிரம்ப் சொல்வது என்ன!
முன்னதாக ஃபொக்ஸ் நியூஸ் உடனான ஒரு நேர்காணலிலும் ட்ரம்ப் கிட்டதட்ட அதே கருத்துகளைக் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது குறித்து எனக்கு முன்பே தெரியும். இனிமேல் ஈரான் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன்.. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அவர்கள் டீல் போடுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.
இதற்கிடையில், இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடியை ஈரான் ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் மீது 100+ டிரோன்களை ஈரான் ஏவியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.