இன்றைய சூழ்நிலையில், உப்பைப் போன்றே சீனிக்கும் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதென்று
பேசப்படுகிறது. சீனி இறக்குமதிக்கான வரியை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தச் சூழ்நிலை உருவாகி வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு அறவிடப்படும் வரியை 30 ரூபாவினால் அதிகரிக்க திறைசேரி தயாராகி வரும் நிலையில், சுமார் 60,000 மெற்றிக் தொன் சீனியை மறைத்து பாரிய இலாபம் ஈட்டும் நோக்கில் இறக்குமதியாளர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக, புறக்கோட்டை மொத்த வியாபர நிலையங்களின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு உள்ளுர் சீனி தொழிற்சாலைகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வாக தற்போது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கான 50 ரூபாய் இறக்குமதி வரியை 80 ரூபாயாக உயர்த்துவதற்கான யோசனை திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதுள்ள இறக்குமதி வரியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அதிகளவிலான சீனியை பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் பாரியளவிலான இறக்குமதியாளர்கள் மறைத்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறக்குமதி வரி, கிலோவுக்கு 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதையடுத்து, அதற்கேற்ப சீனியின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரிக்கும் எனவும், குறைந்த வரியின் கீழ் அதிகளவிலான சீனியை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் இறக்குமதியாளர்கள் பெருமளவு இலாபம் பெற முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தச் சீனி கையிருப்புகளை மறைத்தமை தொடர்பில் மற்றுமொரு இறக்குமதியாளர்கள் குழு நுகர்வோர் அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் அண்மைய நாட்களில், உப்புக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வந்தது. இன்றைக்கும் அந்தப் பிரச்சினை முடிந்தபாடில்லை. இலங்கையிலும் உப்பு உற்பத்தில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், நாட்டின் தேவைக்கு ஏற்ற உப்பை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியாதுள்ளது. தவிர, ஓரளவு முன்னெடுக்கப்பட்ட உற்பத்தியும், நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலைப் பிரச்சினைகளால் பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
இவ்வாறானதொரு பிரச்சினையே தற்போது சீனிக்கும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பல சீனித் தொழிற்சாலைகள் காணப்படுகின்ற போதிலும், முறையான முகாமைத்துவமின்மையால், சீனி உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது.
அந்தவகையில், 1993ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ள கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பான புகைப்படங்கள் சில, “தமிழ்லீடர்” இணையத்தின் கண்களில் பட்டன. கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, ஓரிரு தினங்களுக்கு முன்னர் அங்கு கள ஆய்வில் ஈடுபட்டபோது, இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த தொழிற்சாலை, சுமார் 22,000 ஏக்கர் நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதி, தற்காலிகமாக விவசாயிகளுக்கு சோளம் உற்பத்திக்காக வழங்கப்பட்டுள்ளது.
அதனால் அங்கு மீண்டும் கரும்பு உற்பத்தியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கும், இந்த நிலத்தின் ஒரு பகுதியை அப்பகுதியில் மேற்கொள்ளக்கூடிய பிற தொழில்களுக்கு விடுவிப்பதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.