திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது
தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை(15.04.2025) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த நிலையில், அதில் 4 ஆண்டுகள் வரையில் நிறைவுபெற்றுள்ளது.
எதிர்காலத்தில் யாழ். மாநகர சபை அதனைக் கொண்டு நடத்துவதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காக கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு விரைவாக இதனை மாநகர சபையே பொறுப்பேற்று இயக்க முடியுமோ அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது, இந்தியத் துணைத்தூதுவர் கருத்து வெளியிடுகையில், இந்தக் கலாசார மண்டபத்தை இயக்குவதற்கான இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டம் 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தின் பின்னர் நடத்தப்படவில்லை என்றும் அது எவ்வளவு விரைவாக இடம்பெறுகின்றதோ, அதற்கு அமைவாகவே ஏனைய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இணை முகாமைத்துவக் குழுவை உள்ளூரை மையப்படுத்தியதாக உருவாக்குவது சிறப்பாக இருக்கும் என்றும், இந்தியத் தூதரகம் ஆலோசனை வழங்கும் ஒரு தரப்பாகவே எதிர்காலத்தில் இருக்கும் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், கலாசார மண்டபத்தின் ஒவ்வொரு மாடிக் கட்டடத் தொகுதிக்குமான பல்வேறு விதமான முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது சாதகமானதொரு நிலைமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது திருவள்ளுவர் மண்டபத்தை இந்தியத் தூதரக அதிகாரிகள் பராமரித்து வரும் நிலையில், நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக யாழ். மாநகர சபையால் அதிகாரிகளை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தை விரைவாக கூட்டுவதற்கு ஏதுவாக மத்திய அரசாங்கத்தின் கலாசார அமைச்சுக்கு உடனடியாகக் கடிதம் அனுப்புமாறும் ஆளுநர் பணித்துள்ளார்.
கலாசார மண்டபம் யாழ். மாநகர சபையால் முழுமையாக இயக்கப்பட்ட பின்னர், அதில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பான திட்டமிடல்களை முன்னெடுக்கலாம் என இந்தியத் தூதரக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.