யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள்
தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை புரிந்தமையால், அம்மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளது என்று பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
மகன் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மகனின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்துகொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர்.
தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த மாணவனுக்குக் கட்டாயப்படுத்தி பெணடோல் பருக்கிய பின்னர், தனியார் விடுதியிலிருந்து துரத்தி விட்ட பின்னர், கூகிள் வரைபட உதவியுடன் பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று அங்கிருந்து அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
தாக்குதல் மற்றும் சித்திரவதைக்குள்ளான நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக நீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், உடலளவிலும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் பாதுகாப்பளிக்குமாறு கோரியுள்ள தந்தை, பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.