நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம்
குறித்து அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ள இராமநாதன் அர்ச்சுனா எம்.பி, பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
குறித்த பதிவில்,
“என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று என் தந்தை தெளிவாக சொல்லி தந்திருக்கிறார்.
“கடந்த சம்பவம் ஒரு துன்பியல் சம்பவம். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக என்பதை விட ஒரு வைத்தியராக மனதுக்குள் ஒரு ஆழமான கவலையை உண்டாக்கி இருக்கிறது.
“காயங்களுக்கு மருந்திடும் கைகளால் காயத்தினை ஏற்படுத்தி இருக்கின்றேன். ஒரு பெண்ணை இழிவுபடுத்தி காவாலித்தனம் செய்யும் போது பொறுமையும் ஒரு தடவை செத்து போய்விடுகிறது. ஆழமான வலிகளுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தன்னுடன் வாக்குவாதப்பட்டு, தன்னை பீங்கானால் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நபரே தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்திருந்த பின்னணியில், தற்போது தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.