மட்டக்களப்பு-கொழும்பு பிரதான
பாதையில் இயங்கும் ரயில் சேவைகள் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று காட்டு யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதே இதற்குக் காரணம்.
மின்னேரிய மற்றும் ஹிங்குராக்கொட ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இரு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு எரிபொருள் தாங்கிகள் தடம் புரண்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு கவிழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக, ரயில் பாதையும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த இரண்டு ரயில்களும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த ரயிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.