நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை

மேம்படுத்தும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 5,320 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சிறந்த மகளிர் சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார வசதிகளை வழங்கும் பிரதான வைத்தியசாலையாகும். இந்த வைத்தியசாலை மாவட்டத்தில் 150,000 இற்கும் அதிகமான மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்கி வருகின்றது.
 
இன்று திறந்து வைக்கப்பட்ட மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பு மையம், வடக்கில் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் பிரசவத்தை மேம்படுத்துவதுடன், புதிதாகப் பிறந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் வடமாகாண சுகாதார அமைப்பை வலுப்படுத்தும்.
 
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து, மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பான நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை அவதானிப்பதிலும் இணைந்துகொண்டார்.

IMG 20240525 162635 800 x 533 pixel
 
பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நான் இந்த திட்டத்தை ஆரம்பித்தாலும், கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியால் அந்தப் பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை ஆனால் இன்று வெற்றிகரமாக நிறைவுசெய்து பெண்களுக்கு வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
 
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டத்தின் மூலம் பெண்களை வலுவூட்டத் தேவையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த தனியான ஆணைக்குழு நியமிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
அத்துடன், இந்த ஜூன் மாத இறுதிக்குள் ஆண், பெண் சமூகத்தன்மை சட்டமூலம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இதற்கு பாராளுமன்றத்தில் எவரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
 
இது 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், கொரோனா தொற்று மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக மகளிர் சுகாதார சேவைகளுக்கான இந்த சிறப்பு மையத்தின் பணிகளை முடிக்க முடியவில்லை. ஆனால் இன்று அதை வெற்றிகரமாக முடித்து பெண்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று கிளிநொச்சி நகரில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயத்தை உருவாக்கி இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

IMG 20240525 162551 800 x 533 pixel

Iஅத்துடன், இப்பிரதேசத்தில் வலுசக்தித் திட்டங்களை மீள உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் இவ்வாறான செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் உள்ள காணிப்பிரச்சினைகள் மற்றும் காணாமற்போனோர் பிரச்சினை தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களின் சுகாதார சேவைகளுக்கான சிறந்த நிலையத்தை இந்நாட்டு பெண்களுக்காகச் செய்யப்படும் ஒரு சிறந்த பணியாக அறிமுகப்படுத்த முடியும். பெண்களுக்காக மேலும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
 
நம் நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க எந்தச் சட்டமும் இருக்கவில்லை. அரசியல் யாப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் மாத்திரமே இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, பெண்களுக்கான இரண்டு புதிய சட்ட மூலங்களை தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.
 
பெண்களை வலுவூட்டும் சட்டத்தின் கீழ், சட்டத்தின் மூலம் பெண்களை வலுவூட்டத் தேவையான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த நிபந்தனைகளை அமுல்படுத்த தனியான ஆணைக்குழு நியமிக்கப்படும். மேலும், இந்த ஜூன் மாத இறுதிக்குள் ஆண், பெண் சமூகத்தன்மை சட்ட மூலத்தை நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம். இந்த வரைவு தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். யாரும் அதற்கு எதிராக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
 
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதற்கேற்ப பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பாக பெண்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும்.

IMG 20240525 162704 800 x 533 pixel
 
பெண்களின் உரிமைகள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அதற்கேற்ப அந்த சட்டத்தின் கீழ் நாங்கள் பணியாற்ற முடியும். மேலும், வீட்டில் இருக்கும் பெண்ணின் பாதுகாப்பையும் கவனிக்க வேண்டும். இந்த பெண்கள் உரிமை சட்ட மூலங்கள் ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அந்த சட்ட மூலங்களை அனைவரும் படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெண்களின் உரிமைகள் குறித்து அவர்களுக்குக் கற்பிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்
 
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
 
இன்று கிளிநொச்சியிலும் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் திறக்கப்பட்ட கட்டிடங்கள் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் திறன் கொண்டவை. இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வடமாகாண மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
அத்துடன் யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான பிரேரணையை அடுத்த அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டார். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு ஆதரவளித்திருந்தால் தமிழ் மக்கள் பெரிதும் பயனடைந்திருப்பார்கள்.
 
கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை. பொறுப்பை ஏற்க முன்வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளான வரிசைகள், பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றுக்கு குறுகிய காலத்தில் தீர்வுகளை வழங்கினார். அவருக்கு இன்னும் கால அவகாசம் கொடுத்து அவருடன் இணைந்து முன்னோக்கிச் சென்றால் இந்த நாட்டை கட்டியெழுப்பும் திறன் எமக்கு உண்டு.
 
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ல்ஸ்,
 
துரதிர்ஷ்டவசமாக, எரிவாயு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் சிலர் இறந்தனர். அந்த மக்களின் இயல்பு வாழ்க்கை சீரழிந்தது. இந்த நிலைமைகளால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டி ஏற்பட்டது. இந்த செய்தியை கேட்டு வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாட்டில் நிலவும் இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு உறவினர்கள், நண்பர்கள் என பலரும் நலம் விசாரித்தனர். இன்று நாம் அந்த கடந்த காலத்தை மறந்துவிட்டு சம்பளம் மற்றும் தொழில் வாய்ப்புகளைக் அதிகரிக்கக்கோரி போராட்டம் நடத்துகிறோம்.

IMG 20240525 162724 800 x 533 pixel
 
இன்று உலகமே அங்கீகரிக்கும் ஒரு தலைவர் நாட்டுக்கு தேவை. தற்போதைய பொருளாதார நெருக்கடியை உள்நாட்டு முயற்சிகளால் மட்டும் தீர்க்க முடியாது. அதற்கு சர்வதேச ஒத்துழைப்புத் தேவை. நமது தற்போதைய தலைவருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை, ஆனால் அவரது உலகளாவிய அங்கீகாரம் மற்றும் தலைமைப் பண்பு காரணமாக, இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடிந்தது.
 
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
 
யாழ்.போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாங்கள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வில் ஆர்வமாக உள்ளோம், மேலும் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரண்டு பகுதிகள் அரசாங்க அதிகாரம் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டிய இரண்டு பகுதிகள் என்பதை நாங்கள் அறிவோம். குறிப்பாக யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாம் நன்றி கூறுகின்றோம். எந்தவொரு சமூகத்தின் இருப்பிலும் சுகாதாரப் பாதுகாப்பு ஒரு அடிப்படைப் பகுதியாகும், மேலும் பெண்கள் சுகாதார சேவைகளுக்கான இந்த சிறப்பு மையத்தை உருவாக்க தங்களை அர்ப்பணித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
 
நெதர்லாந்து அரசின் நிதியுதவியின் கீழ் பெண்களுக்கான விசேட கட்டிடத்தை திறக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இது மிகவும் உயர்தரத் திட்டம் என்று குறிப்பிடலாம்.
 
பிரதமர் என்ற ரீதியிலும் தற்போதைய ஜனாதிபதி என்ற ரீதியிலும் ஜனாதிபி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கு நான் நன்றி கூறுகின்றேன்.
 
இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் போனி ஹோபேக்,
 
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறந்த நிலையத்தை திறந்து வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நெதர்லாந்தில் உள்ள VAMED அமைப்புக்கும் இலங்கையின் சுகாதார அமைச்சுக்கும் இடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பின் அடையாளமாக இந்தத் திட்டத்தைக் காணலாம். 2018 ஜூன் 12 இல் முறைப்படுத்தப்பட்ட இந்த கூட்டாண்மை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நான்கு அதிநவீன மருத்துவமனைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
 
அதற்காக, மதிப்பிடப்பட்ட மொத்தத் தொகையில் 75% நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்து சலுகைக் கடனாகவும், மீதமுள்ள 25% நெதர்லாந்து அரசாங்கத்தின் மானியமாகவும் வழங்கப்பட்டது.
 
2022 இல் இலங்கையில் ஏற்பட்ட கோவிட்-19 தொற்றுநோய் நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நெதர்லாந்து அரசாங்கத்தின் மானியம், மொத்தத் தொகையில் 35% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
 
இந்நிகழ்வில் மதகுருமார்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பிரதேச மக்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி