கீரியும் பாம்புமாக கடந்த ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட மொட்டுக் கட்சியும், யானைக் கட்சியும் பாலும்

சுவையுமாக பரஸ்பர ஆட்சியதிகார தேவைக்காக மாறியுள்ளன.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய வங்கியைக் கொள்ளையடித்த ரணில் விக்ரமசிங்கவை சிறைக்குள் தள்ளுவோம் என்று அன்றைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த சூளுரைத்தார்.

அவரைப் பின்பற்றி வியாழேந்திரனும் ரணில் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறி மொட்டுக்குப் பலம் சேர்க்க நினைத்தார். தற்போது என்ன நடந்திருக்கிறது. எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. இரண்டாண்டுகளுக்குள் கோட்டாவின் இனவாத மணல் கோட்டை சரிந்துள்ளது.

ரணிலை தம் பக்கமாக ஈர்த்துக் கொண்டுள்ள மொட்டுக்கட்சியினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்ற ரணிலை மொட்டுக்கட்சியினர் தம் பக்கமாக ஈர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரைப் பிரதமர் ஆக்கியதோடு நின்று விடாமல், பகீரத பிரயத்தனம் செய்து நாடாளுமன்றத்தின் மூலமாக ஜனாதிபதியுமாக்கியுள்ளனர்.

ரணிலை சிறையில் அடைத்துத் தண்டிக்க நினைத்த மொட்டுக் கட்சியினர் தற்போது நாட்டின் அதியுயர் கெளரவமான பதவியை வழங்கித் தம்மைப் பாதுகாத்துள்ளனர். அதாவது ரணிலுக்கு அவமானமளிக்கத் திட்டமிட்ட மொட்டுக் கட்சியினர் தற்போது வெகுமானம் அளித்துள்ளர்.

ஒரு வகையில் பார்த்தால் மொட்டுக்கட்சியில் 144 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியாக கோட்டாபய ஆகியோர் காணப்பட்டனர். அவர்களில் எவரிலும் நம்பிக்கையற்ற நிலையில், தம்மை பொருளாதாரக் குற்றத்தில் இருந்தும், மக்களின் வெறுப்பில் இருந்தும் மீட்கக் கூடிய ஒரே தலைவராக ரணில் விக்ரமசிங்கவை, ராஜபக்சர்கள் உறுதியாக நினைத்துள்ளனர் அல்லது நினைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தேர்தலுக்கான கூட்டணி
அதேவேளை தற்போதைய நிலையில் மொட்டுக்கட்சியினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் தேர்தலுக்கான கூட்டணியை அமைக்கவும் முற்பட்டுள்ளனர். அந்த வகையில் யுத்தக் குற்றம், பொருளாதாரக் குற்றம் என்ற இரு குற்றங்களை இழைத்த மொட்டுக் கட்சியினரை யானைக் கட்சியின் தலைவரான ரணில் பிணையெடுக்க முற்பட்டுள்ளார்.

மேலும் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்த நிலையிலுள்ள யானைக் கட்சியினை மீட்க மொட்டுக் கட்சியினர் தயாராகியுள்ளனர். அதாவது ஐக்கிய மக்கள் சக்தியை உடைப்பதற்கு ஜனாதிபதி ரணில் நினைக்கின்றார். பொருளாதார நெருக்கடியில் இருந்தும் சர்வதேச நெருக்குவாரத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ள ராஜபக்சர்கள் வழி தேடுகின்றார்கள்.

மொட்டுக் கட்சியோடு இணைத்து போட்டியிடுவது தற்கொலைக்கு ஒப்பானது என்று அக்கட்சியின் முன்னை நாள் தோழமைக் கட்சிகள் கருதுகின்றன. இந்த நிலையில் மொட்டுக்கு முட்டாக யானையும், யானைக்கு முட்டாக மொட்டுந்தான் எஞ்சியுள்ளன. மொட்டுக் கட்சியினருக்கு அரசியல் முதலீடு சிங்கள பெளத்த அடிப்படை வாதம் மட்டுமேயுள்ளது.

கடந்த தேர்தலில் அதனை உச்சமாகப் பயன்படுத்தி அமோக வெற்றியீட்டினாலும் இரண்டாண்டுகள் கூட அந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. மேலும் சஹ்ரான் தரப்பினரின் தற்கொலைக்குண்டு வெடிப்புக்கான காரணத்தை பேராயர் மல்கம் ரஞ்சித் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஆட்சி மாற்றத்திற்கான சூழ்ச்சித்திட்டம்
அதாவது ராஜபக்சர்கள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட சூழ்ச்சித்திட்டம் என்பதை பேராயர் உள் நாட்டு மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் உரத்த தொனியில் கூறியுள்ளார்.

சஹ்ரான் குழுவின் குண்டுவெடிப்பு நடந்த காலத்தில் குண்டுவெடிப்புக்குக் காரணம் பாதுகாப்புப் பலவீனம் என்ற மொட்டுக் கட்சியினரின் கருத்துக்களை பேராயர் மல்கம் ரஞ்சித் பூரணமாக நம்பி கோட்டாபய ராஜபக்சவிற்கு சாதகமான நிலைப்பாட்டில் இருந்தார்.

தற்போது ஆட்சி மாற்றத்திற்கான சூழ்ச்சித்திட்டமே குண்டுவெடிப்பு என்பதை அவர் புரிந்துவிட்டார். அப்படியான நிலைமையில் இலங்கைக் கிறிஸ்தவர்கள் இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளனர். அதேவேளை தமிழ், முஸ்லிம் மக்களும் மொட்டுக்கட்சியினரின் இனமத வாதத்தால் வெறுப்படைந்து விட்டனர்.

பொருளாதார நெருக்கடியால் ஒட்டுமொத்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மொட்டுக் கட்சியை மட்டுமல்லாமல் அவர்களைப் பாதுகாக்க வந்த ரணில் மீதும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில்தான் மொட்டும் யானையும் பரஸ்பரம் முட்டுக்கொடுத்து அரசியலில் தப்பிப் பிழைக்க நினைக்கின்றன.

நாட்டின் பொருளாதாரம் என்பது கடன்களில் தான் தங்கியுள்ளது. எனவே ஜனாதிபதி ரணில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் உலக நாடுகளில் இருந்து கடன்கள் பட்டாவது நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பார் என்று மொட்டுக்கட் சியினர் கருதுகின்றனர். அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு கூட்டணி அமைப்பதற்கு எவரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தான் மொட்டு கட்சியினராகிய பொதுஜன பெரமுனவினருக்கும் யானைச் சின்னக்காரர்களான ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் தேர்தல் கூட்டணிக்கான இணக்கப்பாடு தெரிகின்றது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணையக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டால், மொட்டுக்கட்சியுடனான ஒட்டுறவை ஜனாதிபதி ரணில் வெட்டிக் கொள்ளவும் நினைக்க வாய்ப்பு உள்ளது.

சவாலான கட்டங்களைத் தாண்டியுள்ள ரணில்
ஜனாபதி ரணில் தனிப்பட்ட முறையில் மொட்டின் உதவியுடன் பல சவாலான கட்டங்களைத் தாண்டியுள்ளார். ஆனால் மொட்டோடு தேர்தல் கூட்டணியை ஐக்கிய தேசியக்கட்சி அமைத்தால் மொட்டுக்கட்சியின் அடிப்படைவாதம், ஊழல் மோசடிகள், போர்க் குற்றம் பொருளாதாரக் குற்றம் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியும் சுமந்து தான் ஆக வேண்டும்.

2020இல் சறுக்கிய யானையும், 2021இல் சறுக்கிய மொட்டும் பரஸ்பரம் தத்தமக்குரிய முட்டுகளாக மாறியுள்ளன. முட்டுகளால் ஆறுதல் பரிசுகள் கிடைத்துள்ளன. ஆனால் எதிர்காலத்தில் அதிகார இலக்கை அடைவதற்கு சாத்தியமில்லை.

Courtesy: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன்

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி