​தேமுதிகவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் தொடங்கிய போது, அவரது கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு

இருந்தது. தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த விஜயகாந்தை தங்களது கூட்டணிக்குள் அழைக்க அதிமுகவும், திமுகவும் போட்டி போடும் சூழல் ஏற்பட்டது. 

ஆனால், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

இதனால், தேமுதிகவின் அரசியல் நடவடிக்கைகளை அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், மைத்துனன் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரே கவனித்து வருகின்றனர். ஆனாலும், விஜயகாந்த் ஆக்டிவாக இல்லாதது அக்கட்சியினரை வருத்ததிலேயே ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலையின் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். அரசியலில் இருக்கும் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், திரைப்பட நடிகராக இருக்கும் சண்முக பாண்டியன் ஆகிய இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரனிடம் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவுதான். அவர் பழையபடி பேசுவாரா, நடப்பாரா என்றால், அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். உங்கள் அனைவரையும் போல நாங்களும் நம்புகிறோம். இப்போதைக்கு கேப்டன் நல்லா இருக்கிறார். இந்த உடல்நிலையிலேயே அவர் 100 வயது வரை நன்றாக இருப்பார்.” என்றார்.

கேப்டனின் மந்திரமே ‘முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது’ என சொல்லுவார். அதைதான் எங்களது தாரக மந்திரமாக எடுத்துள்ளோம். என்னுடைய கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்களுக்காக ஓடோடி வந்து வேலை செய்கிறேன் என்றும் விஜய பிரபாகரன் அப்போது தெரிவித்தார்.

விஜயகாந்தின் உடல்நிலை குறித்த அவரது மகன் விஜயபிரபாகரன் அளித்துள்ள பேட்டி, தேமுதிக தொண்டர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி