மட்டக்களப்பில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பல பேரிடம் 1 கோடியே 80 இலட்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட்ட
வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவை அடுத்து கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் பீற்றர் போல் நீதிமன்றித்தில் நேற்று (14) உத்தரவிட்டார்.

இது பற்றி தெரியவருவதாவது,

மட்டக்களப்பு, திருகோணமலை வீதியில் அமைந்துள்ள சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் உரிமையாளரும் அதன் முகாமையாளர் மற்றும் துணை முகவர்கள் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை பெற்று தருவதாக கூறி பல பேரிடம் சுமார் 1 கோடியே 80 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இந்த நிலையில் சிலர் குறித்த முகவர் நிலையத்தின் துணை ஏஜன்சி மூலமாவும் முகவர் நிலைய உரிமையாளரிடம் நேரடியாகவும் சிலர் முகாமையாளர் ஊடாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பல இலட்சம் ரூபா பணத்தை வழங்கிய நிலையில், அவர்களில் சிலரை வேலைக்கு அனுப்புவது போல சுற்றுலா விசாவில் துபாய் மற்றம் கட்டார் நாட்டுக்கு அனுப்பியுள்ள நிலையில், அவர்கள் அங்கு சென்று தொழில் இல்லாது கைவிடப்பட்டு நடு வீதியில் நிர்கதியான நிலையில் தங்களது உறவினருடன் தொடர்பு கொண்டு அவர்கள் தமது சொந்த பணத்தை செலுத்தி விமான சீட்டை பெற்றுக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் வெளிநாட்டு வேலை பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட துணை ஏஜன்டுக்களுக்கு எதிராக பலர் மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் இரு துணை ஏஜன்ட்டுக்களை கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விசாரணையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சுமார் ஒருவரிடம் 6 இலட்சம் ரூபா வரை பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களை மட்டக்களப்பிலுள்ள பிரதான முகவர் ஊடாக அனுப்பியுள்ளதாகவும் தெரிய வந்ததையடுத்து, அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து அந்த பிரதான முகவர் நிலையம் தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு பொலிஸாருக்கு அறிவித்த தகவலை அடுத்து இது சட்ட விரோதமாக இயங்கி வருவதாக தெரிய வந்தது.

இந்த நிலையில் அங்கு கடமையாற்றி வந்த முகாமையாளர் 4 இலட்சம் ரூபாவுக்கு அதிகமாக பணத்தை மோசடியாக பெற்றுள்ளதாக இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரை (14) கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சித்தாண்டி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை போன்ற பல பிரதேசங்களிலுள்ள பலரிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக தானும் ஏனைய துணை ஏஜன்சிகாரர்களும் பல இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு அதனை முகவர் நிலைய உரிமையாளரிடம் வழங்கியுள்ளதாகவும்,

இந்த முகவர் நிலைய உரிமையாளர் வெளிநாட்டு வேலை பெற்று தருவதாக பலரிடம் சுமார் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா வரை பெற்றுள்ளதாகவும் அவர் கொக்கட்டிச்சோலை, முனைக்காட்டைச் சேர்ந்தவர் எனவும் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட முகாமையாளரை நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதே வேளை குறித்த முகவர் நிலைய உரிமையாளர், முகாமையாளர் மற்றும் அந்த முகவர் நிலையத்தின் துணை ஏஜென்சி காரர்களுக்கு எதிராக இதுவரை சுமார் 50 இலட்சம் பண மோசடி தொடர்பாக 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி