யாழ்ப்பாணத்தில் சொந்தக் காணிகள் அற்றிருக்கும் 300 முஸ்லிம் குடும்பங்களுக்கு, பச்சிலைப்பள்ளியில் காணிகள்

வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணிச் சீர்த்திருக்க ஆணைக்குழுவின் வசமுள்ள சுமார் 45 ஏக்கர் காணியில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்குப் பிரித்து வழங்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பின்னர் மீள்குடியமர்ந்த முஸ்லிம்களில் 300 குடும்பங்களுக்கு, சொந்தக் காணிகள் இல்லை. அதனால், அவர்களுக்கு அரச வீட்டு வசதி உள்ளிட்ட உதவிகளையும் வழங்க முடியாதுள்ளது.

இதனையடுத்து, பச்சிலைப்பள்ளியில் காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழுவின் ஆளுகையில் உள்ள நிலத்தில் இருந்து இந்தக் குடும்பங்களுக்கு காணிகளை வழங்குமாறு கோரைிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, குடும்பம் ஒன்றுக்கு 2 பரப்புக் காணி வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஆணைக்குழுவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண  மாவட்ட செயலாளர்  அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில்  இராணுவத்தினிடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும்  108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.

“படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக இடம்பெற்றாலும் சிறிது சிறிதாக காணிகள்  விடுவிக்கப்படுகின்ற போதிலும் ஒரு இடர்பாடு காணப்படுகின்றது.

“முகாம்களில் இருக்கின்றவர்களை நாங்கள் விடுவிக்கப்பட்ட இடங்களில்  குடியேற்றக்கூடியவாறு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காணிகளை முழுமையாக கையேற்று அதனை உரிய பாவனைக்கு உட்படுத்தினால் மாத்திரமே தொடர்ச்சியாக காணிகளை விடுவிப்பதற்கு உதவியாக இருக்கும்.

“விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினர் இருந்து வெளியேறியுள்ளனர். எனவே காணி உரிமையாளர்கள் தமது காணிகளை கையேற்கத் தவறுவதால் அந்த கட்டிடடப்  பொருட்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்கின்ற நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படுகின்றது.

“எனவே விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் தங்களுடைய சொந்த காணிகளை கையேற்பதன் மூலமே நாங்கள் மேலதிகமாக படையினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். விடுவிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பொறுப்பேற்பதற்கு முன்வர வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி