ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் இன்று 30ஆவது தடவையாக நாடாளுமன்றம்

செல்கின்றார்.

ஜனாதிபதிகள் யாரும் அதிகமாக நாடாளுமன்றம் செல்வதில்லை. நாடாளுமன்றத்தை ஒத்திப்போடுவதற்கு அல்லது கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவதற்கே செல்வார்கள். ஆனால், ரணில் விக்கிரமசிங்க அதில் இருந்து வித்தியாசப்படுகின்றார்.

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல் கடந்த மாதம் வரை 29 தடவைகள் நாடாளுமன்றம் சென்றுள்ளார். அதாவது, கடந்த வருடம் ஜூலை 20 முதல்இந்த வருடம் ஜனவரி 18 வரை 29 தடவைகள் அவர் நாடாளுமன்றம் சென்றுள்ளார்.

இந்நிலையில், 30ஆவது தடவையாக இன்று சபைக்குச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கின்றார். அதேவேளை, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இன்று இடம்பெறும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நாளை ஆற்றவுள்ள அக்கிராசன உரையின் போது தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளதாகவும், அதற்கு ஆளுந்தரப்பு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மறுப்பு தெரிவித்திருந்ததுடன், இலங்கையின் நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் இயலுமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் எந்த யோசனைகளையும் முன்வைக்கவில்லை. நாட்டின் நிதி நெருக்கடிகள் அடிப்படையில் அரசாங்கத்தினால் செய்ய முடிந்தவை தொடர்பிலும், செய்ய முடியாதவை தொடர்பிலும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

வரி மற்றும் வரியல்லா வருமானமாக அரசாங்கத்திற்கு 158 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே செலுத்த வேண்டிய கடன்கள் பணம் அச்சிடப்பட்டே செலுத்தப்பட்டுள்ளது. நிதி முகாமைத்துவ அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நிதி முகாமைத்துவம் எதிர்க்கட்சி உள்ளிட்ட சகல தரப்பினராலும் யோசனைகளை முன்வைக்க முடியும். அது அவர்களின் பொறுப்பாகும். ஆனால் அவ்வாறானதொரு முறைமை காணப்படுவதாக தெரியவில்லை”- என்றார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று 08ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஒத்திகை நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றதுடன், கோட்டே ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

இன்று மு.ப. 09.15 மணிக்குள் விசேட விருந்தினர்களுக்கு தங்கள் இருக்கைகளில் அமருமாறு கோரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் தினேஷ் குணவர்தனவிக் வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற்பெண்மணியின் வருகையும் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பார்கள்.

படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல கௌரவ சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கோட்டே ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவியர் ஜயமங்கல கீதம் இசைக்கவுள்ளனர்.

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி மு.ப 9.55 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர்.

சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.

சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார்.

இதன்போது சபாநாயகர், நாடாளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை 09ஆம் திகதி மு.ப 9.30 மணிவரை ஒத்திவைக்கப்படும்.

சபை ஒத்திவைக்கப்பட்டதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் இலத்திரனியல் முறையில் (E – Invitations) அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி