நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டமைப்பிற்கு வெளியிலுள்ள தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிடுவதா என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலை எதிர்கொண்டதை போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியுள்ளது.

எனினும், கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாததால் அது பற்றி மீள பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தேர்தல் நெருங்கி விட்டதால், அதைபற்றி பேச அவகாசமில்லையென தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

இறுதியில், தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பங்காளிக்கட்சிகள் எப்படி போட்டியிடுவதென விரைவில் அறிவிப்பார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரினை பயன்படுத்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் இலங்கைத் தமிழரசு கட்சி தனியே போட்டியிடுவதென்று தீர்மானித்துள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு கிடைக்கப்பெறும் ஆசனங்களின் அடிப்படையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கூட்டமைப்பை விட்டு நிரந்தரமாக பிரியவில்லை எனவும் எதிர்வரும் தேர்தலின் போது மட்டுமே தனித்து போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த பிரிவு இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட் ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, துளசி தலைமையிலான ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து ஒரு கூட்டமைப்பை அமைக்கவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி