8 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2023 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு

வரும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

இதன்படி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய எச்.கே.டி.டபிள்யூ. எம்.என்.பி. ஹபுஹின்ன, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்.மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கே. மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராகவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றிய எம். யமுனா பெரேரா, மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றிய எம்.எம். நைமுதீன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராகவும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய பி.பி. குணதிலக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிபரின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து வணிக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராவும், விவசாய அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யு.டி.சி. ஜயலால், கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோரின் பதவிக் காலம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி