எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது

என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

எல்பிட்டி தொகுதி என்பது மிகச்சரியாகக் கூறுவதென்றால் மத்திய கொழும்பு ஆசனத்தைப் போன்றதாகும். எந்தவொரு அரசாங்கத்திலும் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோன்று எல்பிட்டி தொகுதியில் எதிரணியினர் தான் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும். 

நாங்கள் அந்தத் தொகுதியில் தோல்வியடைவோம் என்பதும் அறிந்த விடயமே. எனினும் சிறியளவிலான இந்தத் தேர்தலை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தந்தை இருக்கும் இடத்திற்கே மகனையும் அனுப்பிவிடுவோம் என்று விமல்வீரவன்ச மிகவும் தவறான கருத்தொன்றைக் கூறியிருந்தார். இவ்வாறு பிறரை அச்சுறுத்தி, வன்முறைகளைப் பிரயோகித்து அரசியல் செய்வதே அவர்களுடைய பழக்கமாகும். 

ஒருவேளை கோத்தபாய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியடைந்தால் அவருக்கு எதிராகப் பேசுகின்றவர்களின் வாயில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவார்கள். அவ்வாறானதொரு சூழ்நிலையே தற்போது இருக்கின்றது. 

இம்முறை தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றியடைந்தால் மாத்திரமே சுதந்திரக்கட்சி பாதுகாக்கப்படும். ஏனெனில் அவர் பழிவாங்கும் குணமற்றவர் என்பதால் மீண்டும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் தலைநிமிர்ந்து செயற்பட முடியும். ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றியடைந்தால் சுதந்திரக்கட்சி என்ற பெயரை பொதுமக்கள் மறக்கவேண்டிய நிலையே ஏற்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி