கடினமான பொருளாதார தீர்வில் சிக்கித் தவிக்கும் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

21 தொழிற்சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய “பொது சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம்” 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய கணக்கிடப்படும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி ஆரம்பிக்கும் மதிப்பீட்டு ஆண்டிற்கான வரிக்குரிய வருமானம் 2,000 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்களின் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் 25% அரசு தற்போது மேலதிக கட்டணம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

தனியார் ஓய்வூதிய நிதிகள், விதவைகள்/மனைவியை இழந்தவர்கள், அனாதைகள் நிதிகள், வைத்திய உதவி நிதிகள் மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி, ஊழியர்களின் நிதி உட்பட அனைத்து சமூக பாதுகாப்பு நிதிகளுக்கும் இந்த மேலதிக வரி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக, பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழியர்களின் சேமலாப நிதி (EPF) 1958இல் ஒரு விசேட சட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய நலனுக்காக நிறுவப்பட்டதோடு, அத்தகைய சமூக பாதுகாப்பு நிதிக்கு பணியாளர் மற்றும் முதலாளி ஆகியோர் கூட்டுப் பங்களிப்பை வழங்குவதாக என பெப்ரவரி 11 வெள்ளிக்கிழமையன்று, மையத்தின் இணை அழைப்பாளர்களான சில்வெஸ்டர் ஜெயக்கொடி மற்றும் ரஞ்சன் சேனநாயக்க ஆகியோரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஊழியர் வருங்கால சேமலாப நிதியானது தொழிலாளர் ஆணையாளரால் முழுமையாக கண்காணிக்கப்படுதோடு, ம் நிதியின் நிதி முகாமைத்துவம் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையால் மேற்கொள்ளப்படுகிறது. ஊழியர்களின் சேமலாப நிதி உட்பட இந்த நலன்புரி மற்றும் சமூக பாதுகாப்பு நிதிகள் அனைத்தும் ஏற்கனவே அரசாங்கத்தால் வரி விதிக்கப்பட்டுள்ளன, மேலும் நிதிக்கு பங்களிக்கும் தொழிலாளர்கள் தங்கள் பதவிக்காலம் மற்றும் ஓய்வுக்குப் பின்னர் பல்வேறு வகையான வரிவிதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர்.

அனைத்து நுகர்வோர் பொருட்களுக்கும் விதிக்கப்படும் மறைமுக வரிகள் தவிர, நிதியின் இருப்புத் தொகையை மீளப் பெறுவதற்கு 14% வருமான வரி விதிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கூடுதல் கட்டணத்தின் மூலம், மிகக் குறைந்த சம்பளம் பெறும் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களின் மூலம் சம்பாதித்த எந்தவொரு பணத்திற்கும் 25% வரி விதிக்கப்பட வேண்டும் என பரிந்துரைப்பது பாரிய குற்றமாகும் என பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

”அரசு ஊழியர்களின் ஓய்வூதியமும் அதே கதியை சந்திக்கும், வாழ்க்கைச் சுமையாக இருக்கும் உழைக்கும் மக்கள் தங்கள் எதிர்காலத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குழந்தைகளின் நலனுக்காக சேமித்த பணத்திற்கு வரி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல்.” பல வெளிநாடுகளில் கூட, சமூக பாதுகாப்பு நிதிகள் அனைத்து வகையான வருமான வரிகளிலிருந்தும் முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்க பிரதிநிதிகளின் கூற்றுப்படி, புதிய ஓய்வூதியத் திட்டம் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை இலக்காகக் கொண்டுள்ளது, இதனால் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள் முன்பு இருந்த அதே சலுகைகளை அனுபவிக்கிறார்கள். மேலும் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து வகையான பொருளாதார வீழ்ச்சிகளுக்கும் மத்தியில் நாட்டின் உழைக்கும் மக்களும் அனைத்துப் பிரிவு மக்களும் இப்போது ஆழ்ந்த விரக்தியில் உள்ளனர்.

நாட்டின் உழைக்கும் மக்களுக்காக செயற்படும் இந்த சமூகப் பாதுகாப்பு நிதியில் இவ்வாறு மேலதிக ட்டணம் அறவிடுவது நியாயமில்லை எனவும் அவர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். அரச மற்றும் தனியார் ஊழியர்களே நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிய உந்து சக்திகளாக விளங்குவதாகவும், அந்த அடித்தளம் சரிந்தால் நிலையான அபிவிருத்திக்கான எதிர்கால கணிப்புகளை மேற்கொள்வது மிகவும் கடினமாகும் எனவும் தொழிற்சங்க தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"எனவே, இந்த புதிய மேலதிக கட்டண வரியானது தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதிகளை மேலும் பாதிக்காமல் இருப்பதையும், நலன்புரி மற்றும் சமூக பாதுகாப்பு நிதிகளில் 25% மேலதிக கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யுமாறு அரசாங்கத்தில் உள்ள அனைத்து பொறுப்புள்ள தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

" இல்லையெனில், இந்த சமூகப் பாதுகாப்பு நிதியைப் பாதுகாக்க, பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுடன் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் என்ற வகையில், பொதுமக்கள் மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், ஊடக தொழிலாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம், தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம், ஐக்கிய பொதுச் சேவைகள் சங்கம், வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கம் ஊழியர் சங்கம், காப்புறுதி ஊழியர் சங்கம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அனைத்து ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், ரயில்வே தர தொழிற்சங்க கூட்டமைப்பு, தொலைத்தொடர்பு பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கம், உணவு பானங்கள் மற்றும் புகையிலை தொழிற்துறை ஊழியர் சங்கம், சுதந்திரக் குழு ஊழியர் சங்கம், தேசிய சுதந்திர வர்த்தக சங்கம், அரசு பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் கைவினைஞர் சங்கம், இலங்கை தோட்ட சேவைகள் சங்கம், நிலம் மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம் மற்றும் PEOTECT சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக, பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் செயற்படுகின்றது.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நிதி வருமானமாக கருதி வரி செலுத்த தயாராக இல்லை என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் முதலீடுகளின் வருமானத்தை நிதி வருமானமாக விளக்குவதை தாம் எதிர்ப்பதாக தெரிவித்தார்.

"இது வர்த்தமானியின் ஊடாக மாத்திரம் வந்த விடயமல்ல, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகளில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் அந்தச் சட்டத்தின் கீழ் வருமானமாக வருவதால் வரி விதிக்கப்படும் என வருமான வரித் துறை முன்னர் விளக்கம் அளித்துள்ளது, ஆனால் எங்கள் அமைச்சு தெளிவான கொள்கை தீர்மானத்தை எடுத்துள்ளது. அது தவறு. நாங்கள் பல மாதங்களாக அதனை வலியுறுத்தி வருகிறோம். அதுதான் எங்களின் நிலைப்பாடு. "இதை செலுத்துமாறு இறைவரி திணைக்கள ஆணையாளர் கூறியிருக்கிறார். நாங்கள் அதனை மறுத்துவிட்டோம்." என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்திருந்தார்.



தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி