யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களின் உரிமையை தடுக்கும் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டுமென தென்னிலங்கையில் உள்ள இடதுசாரி கட்சியொன்று வலியுறுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கில் நீதி, நியாயம் மற்றும் நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்க, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், பாதுகாப்புப் படையினரும் காவல்துறையும் நடவடிக்கை எடுத்து வருவதாக நவ சமசமாஜக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த தேசிய உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுமாறும், தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு மனிதாபிமானமற்ற முறையில் இடையூறு விளைவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளை கேட்டுக் கொள்வதாக, நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்கிரமபாகு கருணாரத்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக தமிழ் மக்கள் இரங்கல் தெரிவிப்பதை தடுக்கும் வகையில் அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கடந்த சில நாட்களாக தமிழ் ஊடகங்கள் உள்ளிட்ட செய்தி இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மனித உரிமைகள் எனப்படுவது தனிப்பட்ட விடயம் அல்ல எனத் தெரிவித்துள்ள பேராசிரியர் விக்ரமபாகு கருணாரத்ன, தமது தேசத்தையும் மதத்தையும் கடைப்பிடிதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்பதை ராஜபக்ச அரசாங்கத்தின் நினைவூட்டியதோடு, இந்த செயற்பாடுகளுக்கு சவால் விடுக்கப்பட்டடாலோ? அல்லது இடையூறு விளைவிக்கப்பட்டாலோ அதற்காக போராடுவதற்கு அந்த மக்களுக்கு நியாயமான உரிமை உண்டு எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதை ஆதரிக்கும் ஏனைய மக்களின் உரிமையும் இதில் அடங்கும் எனவும், அதற்கு தடையாக இருந்தால், அந்த நாட்டை ஜனநாயக ரீதியாக செயல்படும் நாடாக அங்கீகரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராடும் உரிமை

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அனைத்து மக்களினதும் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் நவ சமசமாஜக் கட்சி, இந்த தடைகளுக்கு எதிராகதமது சுதந்திரத்திற்காக ஒழுங்கமைக்கப்பட்டு போராடியவர்கள் இந்நாட்டு மக்களே என சுட்டிக்காட்டியுள்ளது.

"தேசிய உரிமை என்பது அதற்காக குரல் கொடுப்பது மாத்திரமல்ல, அமைப்பு ரீதியாக போராடுவதற்கும் உரிமை உள்ளது, சர்வதேச அளவில் ஒரு தேசமாக தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமைக்காக பிரச்சாரம் செய்வது சர்வதேச மனித சமூகத்தின் உரிமையும் கூட” என நவ சமசமாஜ கட்சி நவம்பர் 24 புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் எனவும் இடதுசாரி தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் வாரம்

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு தமிழ் மக்கள் துக்கம் அனுஷ்டிப்பதை தடுக்க அரசாங்கம் அடக்குமுறை கொள்கையை கடைப்பிடிப்பதாக வடக்கு கிழக்கில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு தயாராகி வரும் வடக்கு, கிழக்கில் தமிழ் சமூகத்தின் அரசியல் மற்றும் அடிமட்டத் தலைவர்களுக்கு எதிராக காவல்துறையினர்  இதுவரை 100ற்கும் மேற்பட்ட தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.

தமிழ் மாவீரர்களை கொண்டாடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிப்பதில் நீதிமன்றங்கள் இரண்டு விதமான தீர்மானங்களை வழங்கியுள்ளதாக வடக்கு, கிழக்கு வெகுஜன அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் மாவீரர் வாரம் நவம்பர் 21 முதல் 27 வரை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி