2000 ஏக்கர் கைவிடப்பட்ட வயல் நிலங்களை எல்லையிட்டு விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வன வள திணைக்களத்தினர் வசமுள்ள பொதுமக்களுக்கான காணிகள் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதன்போது ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்கப்படவேண்டிய மேலதிக அரச காடுகளின் பட்டியல் ஒன்று வனவளத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதுடன், 2000 ஏக்கர் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் தொடர்பாக கமநலசேவை திணைக்களமும், வன வள திணைக்களத்தினரும் இணைந்து எல்லைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையினை உடன் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெடிவைத்த கல்லு கிராமத்தின் காணிகள் இரண்டு வாரத்திற்குள் வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்படும். ஈச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குப்பட்ட பகுதியில் குடியேற்றம் செய்வதற்குரிய இடத்தினை விடுவிப்பதாகவும் வன வள திணைக்களத்தினர் உறுதியளித்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், செட்டிகுளம் பிரதேச செயலாளர் பாபயோன், கமநலசேவை உதவி ஆணையாளர் விஸ்ணுகாந், வன வள திணைக்கள மாவட்ட அதிகாரி, மற்றும் வனவள உத்தியோகத்தர்கள், தென்னை பயிர்ச்செய்கை முகாமையாளர், பிரதேச செயலகங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி